5 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி
5 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
5 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, சிஎன்ஜி கார்களை விற்பனை செய்து வருகிறது. i-GPI டெக்னாலஜியுடன் கூடிய ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி கார்களை கடந்த 2010ம் ஆண்டு முதல், மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஆல்டோ 800, ஆல்டோ கே10, வேகன் ஆர், செலிரியோ, டிசையர், எகோ, சூப்பர் கேரி ஆகிய 7 மாடல்களில், மாருதி சுஸுகி நிறுவனம் சிஎன்ஜி ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில், சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில், மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் சிஎன்ஜி வாகனங்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய மைல்கல். அதாவது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி வாகனங்களை தற்போது வரை 5 லட்சம் இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய நகரங்களில், தங்களது ஃபேக்டரி ஃபிட்டட் சிஎன்ஜி கார்கள் அதிகளவில் விற்பனையாகி கொண்டிருப்பதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஎன்ஜி வாகனங்கள் அதிகம் விற்பனையாகி வருகின்றன. தேசிய தலைநகர் பிராந்தியம் என்பது, டெல்லி, நொய்டா, குர்கான், பரிதாபாத் மற்றும் காசியாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களை உள்ளடக்கியதாகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வழங்கி வரும் சிஎன்ஜி மாடல் கார்களில், வேகன் ஆர்தான் அதிகம் விற்பனையாகி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தான், வேகன் ஆர் சிஎன்ஜி காரை அதிகம் தேர்வு செய்கின்றனர்.

இதுதவிர கேப் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களும், மாருதி சுஸுகி வேகன் ஆர் சிஎன்ஜி மாடலை அதிகம் தேர்வு செய்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எர்டிகா காரிலும், மாருதி சுஸுகி நிறுவனம் விரைவில் சிஎன்ஜி ஆப்ஷனை வழங்கவுள்ளது.

அதற்கு முன்பாக, மாருதி சுஸுகி நிறுவனத்தின் டீலர்ஷிப்களில், தற்போது உள்ள எர்டிகா காரின் பெட்ரோல் வேரியண்ட்களுக்கு, சிஎன்ஜி ஒரு ஆக்ஸஸரியாக வழங்கப்பட்டு வருகிறது. எரிபொருளுக்காக செலவிடும் தொகை குறையும் என்பதால்தான் பலர் சிஎன்ஜி வேரியண்ட்களை தேர்வு செய்கின்றனர்.

அதே சமயம் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் பூட் கெபாசிட்டி வெகுவாக குறைந்து விடும் எனக்கருதி, ஒரு சிலர் சிஎன்ஜி வேரியண்ட்களை ஒதுக்கவும் செய்கின்றனர் (ஒரு சில கார்களில், சிஎன்ஜி ஸ்டோரேஜ் டேங்குகள் அதிகப்படியான இடவசதியை ஆக்கிரமித்து கொள்கின்றன) என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இதனால் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. ஏனெனில் 2018-19ம் ஆண்டில் மட்டும், மாருதி சுஸுகி நிறுவனத்தின் சிஎன்ஜி கார்களின் விற்பனை 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications