50 மின்சார வேகன் ஆர் கார்களை கள சோதனைகளுக்காக களமிறக்கியது மாருதி!
இந்தியாவில், 50 மின்சார வேகன் ஆர் கார்களை சாலை சோதனைக்காக களமிறக்கி இருக்கிறது மாருதி கார் நிறுவனம். இந்த 50 மின்சார கார்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருக்க
இந்தியாவில், 50 மின்சார வேகன் ஆர் கார்களை சாலை சோதனைக்காக களமிறக்கி இருக்கிறது மாருதி கார் நிறுவனம். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பெரு நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான மிக முக்கிய முக்கிய முயற்சியாக மின்சார வாகனங்கள் கருதப்படுகின்றன. அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார வாகனங்களை களமிறக்குவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், நாட்டின் கார் விற்பனையில் 50 சதவீத மார்க்கெட் பங்களிப்பை வைத்திருக்கும் மாருதி கார் நிறுவனம் ஓரிரு ஆண்டுகளில் தனது முதல் மின்சார கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. முதல் மாடலாக பேட்டரியில் இயங்கும் வேகன் ஆர் காரை மாருதி கார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த மாதம் டெல்லியில் நடந்த மூவ் மாநாட்டில் பேசிய சுஸுகி கார்ப்பரேஷன் தலைவர் ஒசாமு சுஸுகி," 2020ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இதற்காக, 50 மின்சார வாகனங்களை இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்த உள்ளோம்," என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது 50 மின்சார வேகன் ஆர் கார்களை மாருதி கார் நிறுவனம் சாலை சோதனைகளுக்காக களமிறக்கி இருக்கிறது. குர்கானில் உள்ள ஆலையில் நடந்த நிகழ்ச்சியில், மாருதி கார் நிறுவனத்தின் பொறியியல் பிரிவு மூத்த அதிகாரி சி.வி.ராமன் இந்த 50 மின்சார கார்களையும் கள சோதனை ஓட்டத்திற்காக கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்த 50 மின்சார கார்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. நம் நாட்டின் பல்வேறு தட்பவெப்ப நிலைகள் மற்றும் போக்குவரத்து நிலைகளில் இந்த கார்களின் இயக்கம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கான முயற்சியாக அமையும்.

இந்த சோதனை ஓட்டத்தின்போது கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், மின்சார வேகன் ஆர் காரில் மாற்றங்களை செய்யவும், மேம்படுத்தவும் மாருதி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது கள சோதனைக்கு பயன்படுத்தும் 50 மின்சார வேகன் ஆர் கார்களும் புதிய தலைமுறை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு இந்த புதிய வேகன் ஆர் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில்தான் அந்த காரின் மின்சார மாடல் தற்போது சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கார்களை ஜப்பானை சேர்ந்த சுஸுகி கார்ப்பரேஷன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்கி இருக்கிறது. குர்கானில் உள்ள மாருதி கார் ஆலையில் இந்த 50 கார்களும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications