குறைபாடு உடைய காரை விற்பனை செய்த மாருதி சுஸுகி.. வாடிக்கையாளருக்கு 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
குறைபாடு உடைய காரை விற்பனை செய்ததற்காக வாடிக்கையாளருக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
குறைபாடு உடைய காரை விற்பனை செய்ததற்காக வாடிக்கையாளருக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவாவை சேர்ந்தவர் சிவானந்த் எஸ் ஹரப்பனஹள்ளி. இவர் மாருதி சுஸுகி ஸ்விப்ட் இஸட்எக்ஸ்ஐ (Maruti Suzuki Swift ZXI) கார் ஒன்றை கடந்த 2005ம் ஆண்டு வாங்கினார். சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் என்ற மாருதி சுஸுகி நிறுவன டீலரிடம் இருந்து இந்த கார் வாங்கப்பட்டது.

ஆனால் ஆரம்பத்தில் இருந்தே கிளட்ச் சரியாக இயங்கவில்லை. பல முறை சர்வீஸ் செய்த பிறகும் கிளட்ச் அப்படியேதான் இருந்தது. எனவே கிளட்சை மாற்றி விடலாம் என சிவானந்த் முடிவு செய்தார். அதன்படி கிளட்ச் மாற்றப்பட்டது. ஆனால் அதன்பிறகும் பிரச்னை தொடர்ந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சிவானந்த், மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம், காரை பழுது நீக்கி தரும்படி, மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்பில் திருப்தியடையாத சிவானந்த், மாநில அளவிலான நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை அணுகினார். இதனை விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம், சிவானந்த்திற்கு 2.44 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

அத்துடன் வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரம், அசௌகரியத்தை ஏற்படுத்தியமைக்காக ரூ.30 ஆயிரம் என தனியாக 40 ஆயிரம் ரூபாயை சிவானந்த்திற்கு வழங்க வேண்டும் எனவும் மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து, மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள், தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதனை விசாரித்த தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம், சிவானந்த்தின் ஸ்விப்ட் காரில் குறைபாடு இருந்ததை உறுதி செய்தது.

எனினும் மாநில நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தின் உத்தரவில், தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் சில மாற்றங்களை செய்தது. அதன்படி காரின் விலையில் ஏறக்குறைய சரி பாதி தொகையை சிவானந்த்திற்கு இழப்பீடாக வழங்க தேவையில்லை.

அதற்கு மாறாக 1 லட்ச ரூபாயை மட்டும் சிவானந்த்திற்கு இழப்பீடாக வழங்கினால் போதும் என தேசிய நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதேபோல் அசௌகரியம் ஏற்படுத்தியமைக்காக வழங்கும்படி உத்தரவிடப்பட்ட 30 ஆயிரம் ரூபாயையும் தர தேவையில்லை.

ஆனால் வழக்கு செலவிற்காக 10 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும். இந்த தொகைகளை மாருதி சுஸுகி மற்றும் சௌகுலே இன்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் இணைந்து 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும். குறைபாடு உடைய காரை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ததற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதிய மாருதி சுஸுகி ஸ்விப்ட் 2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications