2030ம் ஆண்டிற்கு முன்னரே இந்தியாவில் மின்சார கார்களை விற்பனைக்கு களமிறக்கும் மாருதி சுஸுகி..!!
2030ம் ஆண்டிற்கு முன்னரே இந்தியாவில் மின்சார கார்களை விற்பனைக்கு களமிறக்கும் மாருதி சுஸுகி..!!
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் இயங்கி வரும் தனது கார்களை எதிர்காலத்தில் ஹைஃப்ரிட் அல்லது முழு மின்சார திறனில் தயாரிக்க மாருதி சுஸுகி ஆயத்தமாகி வருகிறது.

அதன்படி அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ஆல்டோ, செலிரியோ தொடங்கி பலேனோ, பிரிஸ்ஸா போன்ற கார்கள் வரை மின்சாரம் அல்லது ஹைஃப்ரிட் திறனுக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பிட்ட இந்த கார்கள் அடுத்தடுத்து புதிய தலைமுறை மாடலாக மாற்றப்படும் போது, அவை மின்சாரம் அல்லது ஹைஃப்ரிட் தேர்வுகளில் வெளிவரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வாகன பயன்பாட்டை மின்சார ஆற்றலுக்கு மாற்ற மத்தியரசு காலக்கெடுவாக நிர்ணயத்துள்ளது. இந்த காலவரையை அடைவதற்குள் பல நிறுவனங்களின் மின்சாரம் & ஹைஃப்ரிட் கார்கள் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியாவில் மாருதி விற்பனை செய்து வரும் சியாஸ் மற்றும் எர்டிகா கார்கள் மைல்டு-டீசல் ஹைஃப்ரிட் தேர்வில் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன்காரணமாக பெட்ரோல், டீசலுக்கு மாற்றான ஆற்றலில் வாகனங்களை தயாரிக்கும் பணியை மாருதி சுஸுகி முன்பே தொடங்கி நடத்தி வருவது நமக்கு தெரியவருகிறது.

இந்தியாவில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு அது திருத்தப்பட்ட போது மைல்டு-ஹைஃப்ரிட் மற்றும் முழு-ஹைஃப்ரிட் வாகனங்களுக்கு வரி விதிப்பு அதிகப்படுத்தப்பட்டது. அதேபோல மின்சார ஆற்றலில் இயங்கும் வாகனங்கள் ஜிஎஸ்டி-க்கு கீழ் 12 சதவீத வரி விதிப்பை பெறுகின்றன.

ஹைஃப்ரிட் வாகனங்களுக்கான வரி விதிப்பில் அரசு எந்த மாற்றத்தையும் செய்வதாக இல்லை. இது பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரிய அதிருப்தியாக இருக்கின்றன.

இதன்காரணமாகவே மாருதி சுஸுகி தொடங்கி புதியதாக கால்பதிக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல ஹைஃப்ரிட் திறனை விட மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்களை தயாரிக்க அதிகம் ஆர்வம் காட்டுகின்றன.

மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்கான பணிகள் ஒருபக்கம் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வந்தாலும், அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் அமைக்கும் பணி பெரியளவில் நடைபெறவில்லை.

இதுவும் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிருப்தியை அளித்து வருகிறது. குறிப்பாக இந்திய மக்கள் பலர் எதிர்காலத்தில் மின்சார ஆற்றல் பெற்ற வாகனங்கள் தான் பயன்பாடிலும் இருக்கும் என்பதை தெரியாமலேயே இருக்கின்றனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர், கர்நாடாகவின் தலைநகர் பெங்களூரில் மட்டுமே மின்சார வாகனங்களுக்கு அடிப்படை கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தனை ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் எரிவாயுக்களை நம்பி வாகன பயன்பாட்டை செய்து வந்த நாட்டில், ஒரு பெரிய மாற்றத்தை வித்திடும் முயற்சி மலையளவை விட பெரியது.

அதற்கு தற்போதிலிருந்தே பணிகளை தொடங்கினால் மட்டுமே திட்டம் சாத்தியப்படும். ஆனால் மத்தியரசு இந்த முயற்சியில் அலட்சியம் காட்டுவதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இருப்பினும் மின்சார வாகன பயன்பாட்டிற்கு தான் பலம் வாய்ந்த கட்டமைப்புகள் அவசியம், அதுவரை வாடிக்கையாளர்கள் ஹைஃப்ரிட் ரக வாகனங்கள் வாங்குவதில் கவனம் செலுத்தலாம்.


Click it and Unblock the Notifications








