பிரதமர் மோடியால் ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் துறை.. சரிவை சந்திக்க தொடங்கியது கார் விற்பனை
வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையானது, கார்கள் விற்பனையில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையானது, கார்கள் விற்பனையில் குறிப்பிடத்தகுந்த அளவில் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருவதே, பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஆனால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசிடம் எவ்வித திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் மத்திய அரசு கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

தமிழக தலைநகர் சென்னையில் இன்றைய நிலவரப்படி (அக்டோபர் 3) ஒரு லிட்டர் பெட்ரோல் 87.19 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 79.58 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, கார் விற்பனையில் குறிப்பிடத்தகுந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் சில முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனை, கடந்த செப்டம்பர் மாதத்தில் சற்றே சரிவை சந்தித்துள்ளது.

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியே இதற்கு சாட்சி. மாருதி சுஸுகி நிறுவனமானது கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,63,071 கார்களை விற்பனை செய்திருந்தது.

ஆனால் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 1,62,290 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. அதாவது 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மாருதி சுஸுகி கார்களின் விற்பனை 0.5 சதவீதம் என்ற அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.

அதே நேரத்தில் ஹூண்டாய் நிறுவன கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் வெறும் 1 சதவீதம் என்ற அளவில் மட்டுமே ஹூண்டாய் நிறுவன கார்களின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது என்பது கவனித்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஹூண்டாய் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 62,285 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 62,757ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஹூண்டாய் நிறுவனம் 1 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது.

மறுபக்கம் டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் 53,964 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்திருந்தது.

ஆனால் 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கையானது 64,250ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனையானது 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 20 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

உள்நாட்டு விற்பனை மட்டுமல்லாது ஏற்றுமதியிலும் டாடா மோட்டார்ஸ் வளர்ச்சியையே சந்தித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 3,887 கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 5,250ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் ஏற்றுமதி 35 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் மற்றொரு முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா அண்டு மஹிந்திரா, உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என ஒட்டுமொத்தமாக 2 சதவீத வளர்ச்சியை மட்டும் கண்டுள்ளது.

மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனமானது 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 53,752 கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 55,022ஆக அதிகரித்துள்ளது.

இதில், டாடா மோட்டார்ஸ் மட்டுமே குறிப்பிடத்தகுந்த அளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனங்கள் சிறிய அளவிலான வளர்ச்சியை மட்டுமே சந்தித்துள்ளன.

அதே நேரத்தில் நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி சரிவை சந்தித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை ஆகியவையே இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

எனினும் இந்தியாவில் பண்டிகை காலம் வெகு விரைவில் தொடங்கவுள்ளது. எனவே அப்போது கார்களின் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக கருதப்படும் ஏத்தர் 450ன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications