க்ரெட்டாவை சாய்க்க புதிய அஸ்திரத்தை கையிலெடுக்கும் மாருதி!
ஹூண்டாய் க்ரெட்டாவை சாய்ப்பதற்கு சரியான சாய்ஸாக புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவியை தேர்வு செய்துள்ளது மாருதி. தற்போது நடந்து வரும் பாரிஸ் மோட்டார் ஷோவில் மாற்றங்களுடன் கூடிய புதிய சுஸுகி விட்டாரா காட்சி
எஸ்யூவி மார்க்கெட்டில் விட்டாரா பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி மூலமாக வலுவான சந்தை பங்களிப்பை மாருதி பெற்றுள்ளது. எனினும், ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு தொடர்ந்து இருக்கும் வலுவான மார்க்கெட் மாருதியின் கண்ணை உறுத்தி வருகிறது. எஸ் க்ராஸ் காரை நம்பி மோசம் போன நிலையில், க்ரெட்டாவை சாய்ப்பதற்கு வியூகங்களை வகுத்து வருகிறது மாருதி கார் நிறுவனம்.

அதன்படி, ஹூண்டாய் க்ரெட்டாவை சாய்ப்பதற்கு சரியான சாய்ஸாக புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவியை தேர்வு செய்துள்ளது மாருதி. தற்போது நடந்து வரும் பாரிஸ் மோட்டார் ஷோவில் மாற்றங்களுடன் கூடிய புதிய சுஸுகி விட்டாரா காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது.

ஐரோப்பாவில் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மாடலின் உற்பத்தி ஹங்கேரியில் உள்ள சுஸுகி ஆலையில் துவங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், இந்த புதிய மாடலை இந்தியாவிற்காக சில மாறுதல்களை செய்து அறிமுகப்படுத்தலாம் என்ற கணக்கில் மாருதி இருக்கிறது.

ஏற்கனவே, இந்த மாடல் இந்திய மண்ணில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறித்து பல முறை ஸ்பை படங்கள் வெளியாகிவிட்டன. எனவே, இந்த மாடல் இந்தியாவிற்கு வருவது கிட்டத்தட்ட உறுதியான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

புதிய விட்டாரா எஸ்யூவியில் 5 பேர் பயணிப்பதற்கான இருக்கை வசதி உள்ளது. மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவியைவிட அதிக இடவசதி கொண்ட மாடலாக இருக்கும் என்பதுடன், பல பிரிமியம் வசதிகளை பெற்றிருக்கும். ஏற்கனவே, விற்பனையில் இருந்த கிராண்ட் விட்டாரா எஸ்யூவியின் விலை மிக அதிகமாக இருந்ததால், இந்தியாவில் எடுபடவில்லை.

இந்த நிலையில், ஹூண்டாய் க்ரெட்டா மார்க்கெட்டை குறிவைத்து விலை நிர்ணயம் செய்யும் முடிவில் மாருதி இருப்பதாக தெரிகிறது. இதற்காக, வெளிநாடுகளில் கொடுக்கப்படும் சில சிறப்பம்சங்களை குறைத்துக் கொண்டு விலையை நிர்ணயிப்பது குறித்தும் மாருதி பரிசீலித்து வருகிறது.

புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. 17 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் சோலார் யெல்லா பியர்ல் மெட்டாலிக் மற்றும் க்ரே மெட்டாலிக் ஆகிய இரண்டு இரண்டை வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்படும்.

வெளிநாடுகளில் விற்பனைக்கு செல்லும் மாடலில் மிக பிரிமியமான இன்டீரியர் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, பிரிமியம் லெதர் இருக்கைகள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும். அதேபோன்று, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை இந்த எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும்.

வெளிநாடுகளில் டர்போசார்ஜர் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 109 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும், 1.4 லிட்டர் பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கின்றன.

இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட் நிறுவனத்திடமிருந்து 1.6 லிட்டர் டீசல் எஞ்சினை சப்ளை பெற்று பொருத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கொடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, இதன் ரகத்தில் சிறந்த தேர்வாக அமையும்.

புதிய மாருதி விட்டாரா எஸ்யூவி அடுத்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருந்த சுஸுகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி ரூ.15 லட்சம் முதல் ரூ.22 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகம் என்ற காரணத்தால் சீந்துவாரில்லை. இந்த நிலையில், புதிய சுஸுகி விட்டாரா எஸ்யூவியை ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications