2 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த மிட்சுபிஷி திட்டம்!!
இந்தியாவில் மிட்சுபிஷி எக்லிப்ஸ் எஸ்யூவி மற்றும் எக்ஸ்பேண்டர் எம்பிவி கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மிட்சுபிஷி நிறுவனம் பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவியை மட்டுமே விற்பனை செய்து வந்தது. ஒற்றை எஸ்யூவியுடன் காலத்தை ஓட்ட முடியாது என்று கருதிய அந்த நிறுவனம் அவுட்லேண்டர் எஸ்யூவியை சில தினங்களுக்கு முன் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த சூழலில், தொடர்ந்து பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. தனது எக்லிப்ஸ் எஸ்யூவி மற்றும் எக்ஸ்பேண்டர் எம்பிவி கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலித்து வருவதாக மிட்சுபிஷி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உத்தம் போஸ் கூறி இருக்கிறார்.

கடந்த ஆண்டுதான் மிட்சுபிஷி எக்லிப்ஸ் மற்றும் எக்ஸ்பேண்டர் எஸ்யூவி மாடல்கள் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டன. எக்ஸ்பேண்டர் காரானது எஸ்யூவி ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட எம்பிவி கார். அதாவது, க்ராஸ்ஓவர் ரக மாடலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

மிட்சுபிஷி எக்ஸ்பேண்டர் காரில் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16 அங்குல அலாய் வீல்கள் என பிரிமியம் அம்சங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

புதிய மிட்சுபிஷி எக்ஸ்பேண்டர் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மிட்சுபிஷி எக்ஸ்லிப்ஸ் எஸ்யூவி காரும் க்ராஸ்ஓவர் மாடலாகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நவீன டிசைன் தாத்பரியங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பானரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களையும்,தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

புதிய மிட்சுபிஷி எக்லிப்ஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 149 பிஎச்பி பவரையும்,, 249 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இிருக்கும். இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் கன்டட்ரோல் மற்றும் டிரைவிங் மோடுகளும் உள்ளன. ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு போட்டியாக இருக்கும்.

புதிய மிட்சுபிஷி எக்லிப்ஸ் மற்றும் எக்ஸ்பேண்டர் மாடல்கள் நடுத்தர பட்ஜெட் பிரிவில் மிகச் சிறப்பான தேர்வாக இருக்கும். போட்டியாளர்களிடத்தில் இருந்து சற்று தனித்துவமான க்ராஸ்ஓவர் ஸ்டைலில் இந்த மாடல்கள் இருப்பதும் முக்கிய அம்சமாக கூறலாம்.


Click it and Unblock the Notifications








