அபராதம் என்ற பெயரில் பகல் கொள்ளை.. வாகன ஓட்டியிடம் 1.4 லட்ச ரூபாயை சுருட்டிய போலீசார்
போலீசாரின் தவறுதலால் வாகன ஓட்டி ஒருவர் 1.4 லட்ச ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
போலீசாரின் தவறுதலால் வாகன ஓட்டி ஒருவர் 1.4 லட்ச ரூபாயை அபராதமாக செலுத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள மலபார் ஹில் பகுதியை சேர்ந்தவர் ரஹில் மெஹ்தா. வைர வியாபாரியான ரஹில் மெஹ்தாவிடம், ஹோண்டா அக்கார்டு மற்றும் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்கள் உள்ளன.

ஹோண்டா அக்கார்டு காரில் 84 முறையும், பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் காரில் 19 முறையும் என ஒட்டுமொத்தமாக 103 முறை ரஹில் மெஹ்தா அதிவேகத்தில் பயணித்துள்ளார். அதாவது நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிகமான வேகத்தில் அவரது கார் சென்றுள்ளது.

2018ம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாத காலத்தில், 103 முறை ரஹில் மெஹ்தாவின் கார்கள் அதிவேகத்தில் பயணித்துள்ளன. மும்பையில் உள்ள பந்த்ரா வொர்லி சீ லிங்க் பகுதியில்தான் இந்த விதிமீறல் நடைபெற்றுள்ளது.

ரஹில் மெஹ்தாவின் கார்கள் அதிவேகத்தில் பயணித்ததை, பந்த்ரா வொர்லி சீ லிங்க் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கண்டறிந்து விட்டன. ரஹில் மெஹ்தா ஒவ்வொரு முறை அதிவேகமாக சென்றதற்கும் தலா ரூ.1,000 என 103 முறைக்கு ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தனக்கு ரூ.1.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட தகவல் ரஹில் மெஹ்தாவிற்கு தெரியவில்லை. ஏனெனில் இதுதொடர்பாக அவருக்கு எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. இந்த சூழலில், கடந்த செப்டம்பர் 23ம் தேதி, மும்பையின் கிராஃபோர்டு மார்க்கெட் பகுதிக்கு ரஹில் மெஹ்தா சென்றார்.

அப்போது தவறுதலாக நோ பார்க்கிங் ஏரியாவில் தனது ஹோண்டா அக்கார்டு காரை, ரஹில் மெஹ்தா நிறுத்தி விட்டார். எனவே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கான்ஸ்டபிள் சுனில் பாட்டீல் என்பவர், ரஹில் மெஹ்தாவின் ஹோண்டா அக்கார்டு காரை பறிமுதல் செய்து விட்டார்.

பின்னர் அந்த காரின் பதிவு எண், போலீஸ் டேட்டா பேஸ் உடன் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போதுதான் ரஹில் மெஹ்தாவின் ஹோண்டா அக்கார்டு கார் 84 முறை அதிவேகமாக பயணித்திருப்பதும், அதற்கான அபராத தொகை ரூ.84 ஆயிரம் இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதும் தெரியவந்தது.

அத்துடன் தொடர் விசாரணையில், ரஹில் மெஹ்தாவிடம் பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார் ஒன்று இருப்பதும், அந்த காருக்கு ரூ.19 ஆயிரம் அபராதம் செலுத்தாமல் இருப்பதும் தெரியவந்தது. எனவே ஒட்டுமொத்த அபராத தொகையான ரூ.1.3 லட்சத்தை உடனே செலுத்தும்படி ரஹில் மெஹ்தாவிற்கு போலீசார் உத்தரவிட்டனர்.

ஆனால் இந்த விதிமீறல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், தனக்கு எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை எனவும் ரஹில் மெஹ்தா தெரிவித்தார். ஆனால் அதனை போலீசார் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

எனவே உடனடியாக அபராத தொகை ரூ.1.3 லட்சத்தை ரஹில் மெஹ்தா செலுத்தி விட்டார். அத்துடன் கிராஃபோர்டு மார்க்கெட் பகுதியில், ஹோண்டா அக்கார்டு காரை நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியதற்கான அபராத தொகை ஆயிரம் ரூபாயையும் ரஹில் மெஹ்தா செலுத்தி விட்டார்.

ஒட்டுமொத்தமாக ரூ.1.4 லட்சத்தை ரஹில் மெஹ்தா அபராதமாக செலுத்தியுள்ளார். மும்பையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ரஹில் மெஹ்தாவிற்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகையை போலீசார் அபராதமாக விதிக்கவில்லை.

முன்னதாக போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பாலிவுட் நடிகர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலருக்கும் ரூ.103 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த 103 கோடி ரூபாயை வசூலிக்கும் பணியை மும்பை போலீசார் தற்போது தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ரஹில் மெஹ்தாவிற்கு போலீசார் முன்கூட்டியே உரிய முறையில் தகவல் தெரிவித்திருந்தால், அதிவேகம் என்ற தவறை அடுத்த முறை அவர் செய்யாமல் இருந்திருக்கலாம். எனவே ஏதேனும் அபராதம் நிலுவையில் உள்ளதா? என முன்கூட்டியே தெரிந்து கொள்வதே பாதுகாப்பான ஒன்றாக இருக்கும்.

நிலுவையில் உள்ள அபராதங்களை தெரிந்து கொள்ளவும், அதனை செலுத்தவும் செல்போன் ஆப் ஒன்றை மும்பை போலீசார் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளனர். இதன் பெயர் மும்பை டிராபிக் போலீஸ் (Mumbai Traffic Police-MTP) ஆப்.

இதனை முதலில் உங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் உள்ள My Vehicles என்ற பகுதியில், உங்கள் செல்போன் எண், கார் அல்லது டூவீலரின் பதிவு எண் ஆகியவற்றை ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் My E-Challans என்ற பகுதியில் சென்று பார்த்தால், ஏதேனும் அபராதம் நிலுவையில் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் ரஹில் மெஹ்தாவிற்கு ஏற்பட்டது போன்ற மோசமான அனுபவத்தை மும்பைவாசிகள் தவிர்க்கலாம்.
இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் மாடலாக வர இருக்கும் வஸிராணி ஷூல் காரின் கான்செப்ட் மாடல், சமீபத்தில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications