ஹை எண்ட் கார்களுக்கு நிகரான உச்சகட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் லான்ச் ஆகும் சியாஸ்! மாருதி காரா இது!
விரைவில் லான்ச் ஆகவுள்ள புதிய 2018 மாருதி சுஸூகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெறும் அட்டகாசமான பாதுகாப்பு வசதிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.
விரைவில் லான்ச் ஆகவுள்ள புதிய 2018 மாருதி சுஸூகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெறும் அட்டகாசமான பாதுகாப்பு வசதிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2018 மாருதி சுஸூகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார், வரும் 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காருக்கான முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விட்டது.

புதிய 2018 மாருதி சுஸூகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை முன்பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களிடம், 11,000 ரூபாய் முன்பணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் மார்க்கெட்டை விட்டு வெளியேற போகும் பழைய மாடலை விட, புதிய 2018 மாருதி சுஸூகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார், பல மடங்கு பாதுகாப்பு நிறைந்த காராக இருக்கும் என கருதப்படுகிறது. சமீபத்தில் வெளியான நெக்ஸா ஆவணம் ஒன்றின் மூலம், இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெக்ஸா ஷோரூம் மூலம்தான், சியாஸ் கார்களை விற்பனை செய்து வருகிறது மாருதி சுஸூகி. இந்த சூழலில் வெளியான நெக்ஸா ஆவணம் ஒன்றில், புதிய 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில், வேகமாக சென்றால் எச்சரிக்கும் சிஸ்டம், சீட் பெல்ட் அணிவதை நினைவூட்டும் சிஸ்டம் ஆகியவை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில், முதலாவது ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் (Speed Alert System). அதாவது வேகமாக சென்றால் எச்சரிக்கும் சிஸ்டம். மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி டிரைவர் பயணம் செய்து கொண்டிருந்தால், ஒவ்வொரு 60 வினாடிக்கும் 2 பீப் சப்தங்களை ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் எழுப்பும்.

அதே சமயம் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தை கடந்து பயணித்து கொண்டிருந்தால், தொடர்ச்சியாக பீப் சப்தம் எழுந்து கொண்டே இருக்கும். எனவே டிரைவர் சரியான வேகத்தில் மட்டும் காரை செலுத்த, ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் உதவும். இதன்மூலம் காரில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இரண்டாவது, சீட் பெல்ட் ரிமைண்டர் (Seat Belt Reminder). அதாவது சீட் பெல்ட் அணிவதை நினைவூட்டும் சிஸ்டம். டிரைவர் மற்றும் ப்ரண்ட் பாசஞ்சர் (Front Passenger) ஆகியோருக்கு மட்டும் சீல் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி டிரைவர் மற்றும் ப்ரண்ட் பாசஞ்சர் இருக்கைகளில், சென்சார் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அந்த இருக்கைகளில் பயணிகள் அமர்வதை, சென்சார் கண்டறியும். பின்னர் எச்சரிக்கை ஒலி எழுப்பி, சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டும்.

ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்களாக கருதப்படுகின்றன. இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள், மிகவும் விலை உயர்ந்த ஹை எண்ட் (high-end) கார்களில் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

தற்போது மாருதி சுஸூகி நிறுவனமும், உயர்தரமான பாதுகாப்பு வசதிகளை வழங்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த 2 பாதுகாப்பு அம்சங்களும், புதிய 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆல்ஃபா, ஸீட்டா, டெல்ட்டா, சிக்மா என அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக இடம்பெறவுள்ளன.

இதுதவிர டியூயல் ஏர்பேக் (Dual Airbag) மற்றும் ஏபிஎஸ் (ABS) பிரேக்கிங் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும், புதிய 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்டாக இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயமாகும்.

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் சமீபத்தில் லான்ச் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் உள்ளிட்ட கார்களுக்கு, புதிய 2018 சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய 2018 மாருதி சுஸூகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் கார், பெட்ரோல், டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது. பெட்ரோல் மாடலில் உள்ள 1.5 லிட்டர் இன்ஜின், அதிகபட்சமாக 103 எச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய சக்தி வாய்ந்தது.

அதே நேரத்தில் டீசல் மாடலில் வழங்கப்படவுள்ள 1.3 லிட்டர் இன்ஜின், அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது. பெட்ரோல் மாடல் கார் லிட்டருக்கு 21 கிலோ மீட்டருக்கு மேலும், டீசல் மாடல் கார் லிட்டருக்கு 27 கிலோ மீட்டருக்கு மேலும் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications