சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய விதி.. கார், பைக் விலை உயர்ந்தது..
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, இந்திய மோட்டார் வாகன சட்டத்தில், இன்று முதல் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, புதிய கார் மற்றும் பைக்குகளின் விலை உயர்ந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, இந்திய மோட்டார் வாகன சட்டத்தில், இன்று முதல் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, புதிய கார் மற்றும் பைக்குகளின் விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய கார் அல்லது டூவீலர் வாங்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் அதிக தொகை செலுத்த தயாராகி கொள்ளுங்கள். ஆம், புதிய கார் மற்றும் டூவீலர்களின் விலை இன்று (செப்டம்பர் 1) முதல் உயர்ந்து விட்டது.

அனைத்து புதிய கார்கள் மற்றும் டூவீலர்களுக்கு, நீண்ட கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி (Long-term third-party insurance policy) கட்டாயம் என்ற விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாகதான், புதிய கார்கள் மற்றும் டூவீலர்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையமானது (IRDAI-Insurance Regulatory and Development Authority of India), புதிய கார்கள் மற்றும் டூவீலர்களுக்கு, நீண்ட கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் (காப்பீடு) பாலிசி கட்டாயம் என்ற புதிய விதியை அமல்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்றுதான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக செலுத்த வேண்டிய நீண்ட கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான தொகை காரணமாக புதிய கார் மற்றும் டூவீலர்களின் ஒட்டுமொத்த விலை உயர்வடைந்துள்ளது.

இன்று முதல் அமலுக்கு வந்துள்ள விதிகளின்படி, புதிய கார்களுக்கு மூன்று ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம். அதே நேரத்தில், புதிய டூவீலர்களுக்கு, ஐந்து ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1,000 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்று ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான தொகை 5,286 ரூபாய். 1,000 முதல் 1,500 சிசி வரையிலான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்று ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான தொகை ரூ.9,534.

1,500 சிசி மற்றும் அதற்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்று ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான தொகை ரூ.24,305 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டூவீலர்களுக்கு 5 ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

75 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான 5 ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசிக்கான தொகை ரூ.1,045 எனவும், 75 சிசி மற்றும் 150 சிசிக்கு இடையிலான இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி தொகை ரூ.3,285 எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 150 சிசி முதல் 350 சிசிக்கு இடைப்பட்ட டூவீலர்களுக்கான 5 ஆண்டு கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி தொகை ரூ.5,453 எனவும், 350 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட டூவீலர்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி தொகை ரூ.13,034 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய கார்களுக்கு 3 ஆண்டும், புதிய டூவீலர்களுக்கு 5 ஆண்டும், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும், இந்த புதிய விதியை இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் அமல்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம்தான் உத்தரவிட்டது.

அதனை ஏற்றுதான், புதிய கார்கள் மற்றும் புதிய டூவீலர்களுக்கு, நீண்ட கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசி கட்டாயம் என்ற விதி, இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகதான், புதிய கார் மற்றும் டூவீலர்களின் விலை உயர்ந்துள்ளது.

நீண்ட கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் பாலிசியை கட்டாயமாக்கியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு நன்மை பயப்பதாகவே இருக்கும். ஆனால் இதன் காரணமாக புதிய கார், பைக்குகளின் விலை உயர்ந்திருப்பது, வாகன உற்பத்தியாளர்களுக்கும், டீலர்களுக்கும் பின்னடையை ஏற்படுத்தும்.

ஏனெனில் விலை உயர்வு காரணமாக புதிய கார், பைக்குகளின் விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் சிறிய அளவிலான விலை உயர்வு மட்டுமே என்பதால், விற்பனை ஒரேயடியாக சரிந்து விடும் என்றெல்லாம் சொல்லி விட முடியாது.


Click it and Unblock the Notifications








