எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் கார்களுக்கான வேக வரம்பு உயர்வு!!
எக்ஸ்பிரஸ் சாலைகளில் கார்களுக்கான வேக வரம்பு 120 கிமீ வேகம் என்ற அளவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிமீ வேகத்திலும், நகரப்புற சாலைகளில் 70 கிமீ வேகத்திலும் செல்வதற்கு அனுமதிக
எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் கார்களுக்கான வேக வரம்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் வாகன வகைகளுக்கான வேக வரம்பு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

நாடுமுழுவதும் உள்ள சாலைகளின் கட்டமைப்பு வெகுவாக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, எக்ஸ்பிரஸ் சாலைகளில் வேக வரம்பை உயர்த்தி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இதுவரை எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்வதற்கு கார்களுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த வேக வரம்பு இப்போது மணிக்கு 120 கிமீ வேகம் என்ற அளவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற சாலைகளில் மணிக்கு 70 கிமீ வரை செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கார் உள்ளிட்ட 8 இருக்கைகள் வரை கொண்ட எம்-1 எனப்படும் வாகன வகைகளுக்கு மேற்கண்ட புதிய வேக வரம்பு அறிவிப்பு பொருந்தும். அதேநேரத்தில், வாடகை கார்கள் எக்ஸ்பிரஸ் சாலைகளில் 100 கிமீ வேகம் வரையிலும், தேசிய நெடுஞ்சாலைகலில் 90 கிமீ வேகம் வரையிலும் அனுமதிக்கப்படும்.

நகரச்சாலைகளில் வாடகை கார்கள் மணிக்கு 70 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், இந்த அறிவிப்பை தொடர்ந்து வாடகை கார்களில் உள்ள வேக வரம்பு சாதனத்தில் மாற்றம் செய்யப்படுமா என்பது குறித்த விளக்கம் இல்லை.

எம்-2 மற்றும் எம்-3 எனப்படும் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு எக்ஸ்பிரஸ் சாலைகளில் 100 கிமீ வேகம் வரையிலும், நெடுஞ்சாலைகளில் 90 கிமீ வேகம் வரையிலும் செல்வதற்கு அனுமதிக்கப்படும். நகரச் சாலைகளில் 60 கிமீ வேகம் வரை செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

எக்ஸ்பிரஸ் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் 80 கிமீ வேகம் வரையிலும், நகரச்சாலைகளில் 60 கிமீ வேகம் வரையிலும் செல்வதற்கு வேக வரம்பு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மக்கள் நடமாட்டும் மிகுந்த பகுதிகள், நகரங்கள், கிராமங்கள் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை குறைப்பது குறித்து உள்ளூர் நிர்வாகம் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








