மாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்!
கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஆஸ்பயர் காரை மேம்படுத்தி இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஃபோர்டு கார் நிறுவனம். வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய 1.2
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில், சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் மாடல் என்ற பெருமைக்குரியது ஃபோர்டு ஆஸ்பயர் கார். ஆனால், புதிய மாருதி டிசையர் மற்றும் புதிய ஹோண்டா அமேஸ் கார்கள் வருகையால், பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இதனை மனதில் வைத்து கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஆஸ்பயர் காரை மேம்படுத்தி இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது ஃபோர்டு கார் நிறுவனம். பெட்ரோல், டீசல் மாடல்கள் ஆம்பியன்ட், டிரென்ட், டிரென்ட் ப்ளஸ், டைட்டானியம் மற்றும் டைட்டானியம் ப்ளஸ் ஆகிய 5 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் டைட்டானியம் வேரிண்ட்டில் மட்டும் கிடைக்கும்.

வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முகப்பில் க்ரில், பம்பர் மற்றும் ஹெட்லைட்டுகளில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய டிசைனிலான 15 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் டெயில் லைட்டுகள் மற்றும் பம்பர் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வந்துள்ளது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 6.5 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தற்போது ஃபோர்டு சிங்க்-3 சாஃப்ட்வேருடன் வந்துள்ளது. புதிய வடிவமைப்பில் ஏர்வென்ட்டுகள் இடம்பெற்றுள்ளன.

இரண்டு 12 வோல்ட் சார்ஜர்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஆகிய வசதிகளை பெற்றிருக்கிறது. இந்த காரில் இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், ஹில் லாஞ்ச் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் ஆகிய பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.

முக்கிய மாற்றமாக புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 120 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். இந்த எஞ்சின் ஆப்ஷன் டைட்டானியம் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 20.4 கிமீ மைலேஜ் தரும் என்றும், 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் லிட்டருக்கு 26.1 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் ஒயிட் கோல்டு, மூன்டஸ்ட் சில்வர், ஸ்மோக் க்ரே, அப்சொலியூட் பிளாக், டீம் இம்பேக்ட் புளூ, ரூபி ரெட் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு ஒயிட் ஆகிய 7 வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ஃபோர்டு ஆஸ்பயர் காரின் பெட்ரோல் மாடல் ரூ.5.55 லட்சம் முதல்ல ரூ.7.24 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் மாடல் ரூ.6.45 லட்சம் முதல் ரூ.8.14 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும். 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.8.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது.

இந்த செக்மென்ட்டில் முதல் மாடலாக 5 ஆண்டுகளுக்கான வாரண்டியுடன் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் வந்துள்ளது. மேலும், புதிய மாருதி டிசையர் மற்றும் புதிய ஹோண்டா அமேஸ் கார்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்டுக்கு ரூ.3,500 என்ற அளவில் பராமரிப்பு கட்டணம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில், வேடிக்கையான விஷயம் என்னவெனில், பழைய மாடலைவிட பெட்ரோல் பேஸ் மாடல் ரூ.26,000 வரையிலும், டீசல் பேஸ் மாடல்மாடல் ரூ.41,000 வரை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதமாக, விலையை கணிசமாக குறைத்துள்ளது ஃபோர்டு நிறுவனம். இந்த யுக்தி கைகொடுக்கிறதா என்பதை வரும் மாதங்களின் விற்பனையை பொறுத்தே தெரிந்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications