புதிய மாருதி எர்டிகா காருக்கு டீலர்களில் ரகசிய முன்பதிவு!
வரும் நவம்பர் 21ந் தேதி புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக டீலர் வட்டாரங்கள் உறுதிப்படுத்திய
புதிய மாருதி எர்டிகா காருக்கு டீலர்களில் முன்பதிவு ஏற்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வரும் நவம்பர் 21ந் தேதி புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய மாடலுக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருவதாக டீலர் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ரூ.11,000 முன்பணம் கொடுத்து புதிய மாருதி எர்டிகா காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று டீலரில் தெரிவிக்கப்படுகிறது.

ஒருவேளை, கார் அறிமுகம் செய்யப்பட்டவுடன், முன்பதிவை ரத்து செய்தால், ரூ.11,000 முன்பணத்தை முழுவதுமாக ரத்து செய்து கொள்ளலாம் என்றும் அந்த டீலரில் உறுதி கூறப்பட்டது. இந்த சூழலில், புதிய மாருதி எர்டிகா காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுவிட்டது. விரைவில் இந்த புதிய மாடல் டீலர்களை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி பலேனோ, புதிய மாருதி ஸ்விஃப்ட் கார்கள் உருவாக்கப்பட்ட அதே ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில்தான் புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலகு எடையுடன் வலிமையான கட்டமைப்புடன் புதிய மாருதி எர்டிகா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா கார் வடிவமைப்பில் முற்றிலும் புதிய மாடலாக வர இருக்கிறது. புதிய க்ரில் அமைப்பு, வலிமையான பம்பர்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் எல்இடி பகல்நேர விளக்குகள், புத்தம் புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை காருக்கு சிறப்பான தோற்றப் பொலிவை வழங்கும். புதிய அலாய் வீல்கள் டிசைனும் வெகுவாக கவரும் வகையில் இருக்கும்.

உட்புறம் மிக பிரிமீயமாக மாற்றப்பட்டு இருப்பதுடன், அதிக தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. முக்கிய அம்சமாக தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரட்டை வண்ண டேஷ்போர்டு அமைப்பு, பிரிமீயம் சீட் கவர்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை பெற்றிருக்கும்.

புதிய மாருதி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

டீசல் மாடலில் 1.3 லிட்டர் எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல், டீசல் மாடல்களில் SHVS என்ற மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இடம்பெற இருக்கிறது. இதனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற ஏதுவாகும்.

புதிய மாருதி எர்டிகா காரில் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், கட்டுமானத் தரத்திலும் சிறப்பான காராக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

தற்போதைய மாடலைவிட அதிக பிரிமீயம் அம்சங்களுடன் கூடுதல் விலையில் புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களுக்கு நேரடி போட்டியை தரும்.


Click it and Unblock the Notifications