புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்!
வரும் நவம்பர் 21ந் தேதி புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வடிவமைப்பிலும், வசதிகளிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் இந்தோனேஷியாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டு, அங்கு விற்பனைக்கும் வந்துவிட்டது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த காரை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் மாருதி ஈடுபட்டுள்ளது. இந்த புதிய தலைமுறை எர்டிகா கார் கடந்த சில மாதங்களாக தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது உற்பத்தியும் துவங்கி விட்டது.

இந்த நிலையில், வரும் நவம்பர் 21ந் தேதி புதிய மாருதி எர்டிகா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. தற்போதைய மாடலைவிட வடிவமைப்பில் பல மாற்றங்களுடன், அதிக வசதிகளுடன் வர இருக்கிறது.

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரோம் வில்லைகளுடன் கூடிய புத்தம் புதிய முகப்பு க்ரில் மைப்பு, வலிமையான தோற்றத்தை தரும் பம்பர் அமைப்பு, புதுமையான டி பில்லர் மற்றும் புதிய டெயில் லைட்டுகளுடன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அலாய் சக்கரங்களும் இந்த காரின் மிடுக்கை தருகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் உருவாக்கப்பட்டட ஹார்ட்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய தலைமுறை மாருதி எர்டிகா கார் பழைய மாடலைவிட இலகு எடை கொண்டதாகவும், வலுவான கட்டமைப்புடன் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாருதி எர்டிகா காரில் 6.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இது சப்போர்ட் செய்யும். அப்ஹோல்ஸ்ட்ரியும் மிக தரமானதாக கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய மாருதி சியாஸ் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் புதிய மாருதி எர்டிகா காரிலும் எதிர்பார்க்கப்படுகிறது. சுஸுகியின் SHVS மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இந்த எஞ்சின் வர இருக்கிறது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய தலைமுறை மாருதி எற்டிகா காரின் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

புதிய மாருதி எர்டிகா காரில் தற்போது பயன்படுத்தப்படும் அதே 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தக்க வைக்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 88 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். காரின் எடை குறைந்துள்ளதால், மைலேஜ் சற்று மேம்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய மாருதி எர்டிகா காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு ஆக்சஸெரீகளாக கொடுக்கப்பட்டு இருக்கும். விலை உயர்ந்த மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

புதிய மாருதி எர்டிகா கார் ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. சக்திவாய்ந்த புதிய பெட்ரோல் எஞ்சின், அதிக இடவசதி மற்றும் புத்தம் புதிய டிசைனில் வருவதால் வழக்கம்போல் விற்பனையில் ஒரு ரவுண்டு வரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications