புதிய சுஸுகி எர்டிகா கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!
புதிய சுஸுகி எர்டிகா கார் இந்தோனேஷியாவில் துவங்கி இருக்கும் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் மாருதி பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த தகவல்கள், படங்களை இ
புதிய சுஸுகி எர்டிகா கார் இந்தோனேஷியாவில் துவங்கி இருக்கும் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் மாருதி பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த தகவல்கள், படங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி பலேனோ, இக்னிஸ், டிசையர் மற்றும் புதிய ஸ்விஃப்ட் கார்கள் உருவாக்கப்பட்ட சுஸுகியின் புதிய ஹார்ட்டெக் பிளாட்ஃபார்மில் புதிய சுஸுகி எர்டிகா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், தற்போதைய மாடலைவிட எடை குறைவாகவும், அதிக உறுதியான கட்டமைப்பையும் பெற்றிருக்கிறது.

புதிய சுஸுகி எர்டிகா கார் 4,395 மிமீ நீளமும், 1,735 மிமீ அகலமும், 1,690 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய மாடலைவிட நீளத்தில் 99 மிமீ வரையிலும், அகலத்தில் 40 மிமீ வரையிலும், உயரத்தில் 5 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

முன்புறத்தில் க்ரோம் க்ரில் அமைப்பு பிரதானமாக காட்சி தருகிறது. க்ரோம் க்ரில் அமைப்புடன் இணைந்த வகையில் இருபுறத்திலும் ஹெட்லைட் அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பனி விளக்குகள் அறை முக்கோண வடிவிலான அறைக்குள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பின்புறத்தில் முக்கிய மாற்றமாக L- வடிவிலான டெயில் லைட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

உட்புறத்தில் பீஜ் வண்ண இன்டீரியர் இடம்பெற்று இருக்கிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைப் போன்றே, பின் இருக்கை பயணிகளுக்கான தனி ஏசி வென்ட் கூரையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஃபாக்ஸ் வுட் மர அலங்கார தகடுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மூன்றாவது வரிசை இருக்கையை 50:50 என்ற அளவில் மடக்கிக் கொள்ளும் வசதி உள்ளது.

உடைமைகள் மற்றும் பொருட்களை வைப்பதற்கான பூட் ரூம் வசதி 18 லிட்டர் கூடுதலாகி இருக்கிறது. தற்போது 153 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற்றிருக்கிறது. பழைய மாடலைவிட நீள, அகலம் மற்றும் உயரத்தில் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், உட்புற இடவசதி வெகுவாக மேம்பட்டு இருக்கிறது.

புளூடூத் இணைப்பு வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு, லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல் என பிரிமியம் அம்சங்கள் தொடர்கின்றன.

புதிய சுஸுகி எர்டிகா காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் இணைந்து செயல்படும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

புதிய எர்டிகா காரில் புத்தம் புதிய 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனிலும் வரும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே டீசல் மாடல் கிடைக்கும்.

புதிய மாருதி எர்டிகா கார் இந்தியாவில் ஏற்கனவே சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. புதிய வடிவமைப்பு, கூடுதல் சிறப்பம்சங்கள், அதிக இடவசதி வாடிக்கையாளர்களை கவரும்.


Click it and Unblock the Notifications








