புதிய மாருதி ஸ்விஃப்ட், பலேனோ கார்களுக்கு ரீகால் அறிவிப்பு!!
பிரேக் சிஸ்டத்தில் குறைபாடுடைய உதிரிபாகத்தை மாற்றித் தருவதற்காக, புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
பிரேக் சிஸ்டத்தில் குறைபாடுடைய உதிரிபாகத்தை மாற்றித் தருவதற்காக, புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

மாருதி நிறுவனத்தின் நெக்ஸா கார் இணையதளத்தில் இந்த ரீகால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 52,686 புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்கள் திரும்ப அழைக்கப்பட்டு பிரச்னை சரிசெய்து தரப்பட உள்ளது.

கடந்த டிசம்பர் 1 முதல் மார்ச் 2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களில் பிரேக் சிஸ்டத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் பிரேக் வாக்கம் ஹோஸ் பைப்பில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காரை குறைவான தூரத்தில் நிறுத்துவதற்கு பிரேக் ஆற்றலை அதிகப்படுத்துவதற்கு பிரேக் பூஸ்டர் சிஸ்டத்தில் இருக்கும் ஹோஸ் பைப் முக்கிய பாகமாக இருக்கிறது.

பிரேக் ஹோஸ் பைப்பில் குறைபாடு இருந்தாலும், பிரேக் செயல்திறன் முழுமையாக பாதிக்கப்படாது. பிரேக் ஆற்றல் முழுமையாக இருக்காது. இது நிச்சயம் விபத்துக்கு வழி வகுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, விரைவாக இந்த குறைபாடுடைய ஹோஸ் பைப்பை மாற்றித் தருவதற்கு மாருதி நிறுவனம் நடவடிக்கை எடுக்க இருக்கிறது.

இந்த குறைபாடுடைய பாகத்தை மாற்றித் தருவதற்காக தானாக முன்வந்து சிறப்பு சர்வீஸ் முகாமை மாருதி நடத்த இருக்கிறது. மேற்கண்ட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்களின் உரிமையாளர்களுக்கு டீலர்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட இருக்கிறது.

வரும் 14ந் தேதி முதல் இந்த சிறப்பு சர்வீஸ் முகாமை மாருதி கார் நிறுவனம் துவங்க இருக்கிறது. சம்பந்தப்பட்ட கார் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, அவர்களது காரில் குறைபாடுடையதாக கருதப்படும் பாகத்தை சோதித்து, கட்டணமில்லாமல் மாற்றித் தர இருக்கிறது மாருதி நிறுவனம்.

மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார் உரிமையாளர்கள் மாருதி நெக்ஸா இணையதளத்தில் தங்களது கார் வின் நம்பரை பதிவு செய்து, தங்களது கார் இந்த ரீகால் பட்டியலில் உள்ளதா என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரும், பலேனோ காரும் குஜராத்தில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் சுஸுகி ஆலையில் ஒரே உற்பத்திப் பிரிவில்தான் அசெம்பிள் செய்யப்படுகின்றன. எனவே, இரண்டு கார்களிலும் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ கார்கள் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்களை அனைத்து வேரியண்ட்டுகளிலும் பெற்றிருக்கின்றன. இரண்டு கார்களுமே மாருதி நிறுவனத்தின் விற்பனையில் மிக முக்கிய மாடல்களாக விளங்குகின்றன.

இந்த நிலையில், இரண்டு கார்களிலும் இருக்கும் குறைபாடுடைய பாகத்தை கட்டணமில்லாமல் மாற்றித் தருவதற்கு தாமாக முன்வந்து மாருதி நிறுவனம் ரீகால் அறிவிப்பை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்க விஷயமாகவே கருத முடியும்.

ரீகால் அறிவிப்பில் உங்களது மாருதி காரும் இடம்பெற்றிருக்கிறதா என்பதை இந்த இணைப்பை க்ளிக் செய்து உங்களது காரின் வின் நம்பரை கொடுத்து தெரிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications







