புதிய மாருதி விட்டாரா எஸ்யூவி இந்திய வருகை விபரம்!
அடுத்த ஆண்டு புதிய எஸ்யூவி மாடலை களமிறக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
எஸ்யூவி மார்க்கெட்டில் இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில், புதிய எஸ்யூவி மாடலை மாருதி நிறுவனம் களமிறக்க இருக்கிறது.

மாருதி நிறுவனம் முதல்முறைாக எஸ் க்ராஸ் காருடன் எஸ்யூவி மார்க்கெட்டில் அடி எடுத்து வைத்தது. ஆனால், அந்த காரின் விலை எகிடுதகிடாக நிர்ணயிக்கப்பட்டதால் மார்க்கெட்டில் எடுபடவில்லை.

உடனே சுதாரித்துக் கொண்டு 4 மீட்டர் நீளத்திற்கும் குறைவான விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியை மிக சரியான பட்ஜெட்டில் களமிறக்கியது. விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு நல்ல வரவேற்பு இருப்பதுடன், விற்பனையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்த சூழலில், எஸ் க்ராஸ் கார் மாடல் க்ராஸ்ஓவர் ரகத்தில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் கவனத்தை பெறவில்லை. எனவே, முழுமையான எஸ்யூவி மாடலை இதே ரகத்தில் நிலைநிறுத்த மாருதி முடிவு செய்துள்ளது.

அதன்படி, தனது விட்டாரா எஸ்யூவியை இந்த செக்மென்ட்டில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவி எஸ் க்ராஸ் காரைவிட சற்று கூடுதல் பட்ஜெட்டில் நிலைநிறுத்தப்படும்.

ஐரோப்பிய நாடுகளில் சுஸுகி பிராண்டில் விற்பனையில் இருக்கும் இந்த விட்டாரா எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது இந்த எஸ்யூவியில் 140 பிஎச்பி பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த பெட்ரோல் மாடலாக இருக்கும்.

அதேபோன்று, டீசல் மாடலில் ஃபியட் நிறுவனத்தின் 1.6 லிட்டர் மல்டிஜெட் டர்போசார்ஜ்டு எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பெட்ரோல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

சர்வதேச அளவில் இந்த விட்டாரா எஸ்யூவி ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இந்தியாவில் முன்சக்கரங்களுக்கு எஞ்சின் பவர் செலுத்தும் நுட்பத்திலான ஃப்ரண்ட் வீல் டிரைவ் ஆப்ஷனில் வரும்.

இந்த எஸ்யூவி 5 சீட்டர் மாடலாகவும், அதிக பிரிமியம் வசதிகளை பெற்றதாகவும் இருக்கும். ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இடம்பெற்றிருக்கும்.

நடுத்தர வகை எஸ்யூவி மார்க்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு இந்த புதிய விட்டாரா எஸ்யூவி சிறப்பான மாடலாக இருக்கும் என்று மாருதி நிறுவனம் கருதுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இந்த புதிய விட்டார எஸ்யூவி இந்திய மண்ணில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்த ஸ்பை படங்கள் கூட வெளியாகின. இந்த புதிய எஸ்யூவி ஹூண்டாய் க்ரெட்டா மார்க்கெட்டை குறிவைத்து நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Moneycontrol


Click it and Unblock the Notifications