புதிய மாருதி வேகன் ஆர் காரின் உற்பத்தி துவங்கியது: விரைவில் சந்தைக்கு வருகிறது
புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியிருக்கிறது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தக்க வைக்கப்பட இருக்கிறது.
புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியிருக்கிறது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய சந்தையில் மாருதி கார் நிறுவனத்தின் மிக முக்கிய மாடல் வேகன் ஆர். பட்ஜெட் கார் மார்க்கெட்டில் வேகன் ஆர் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழலில், சந்தைப் போட்டியை சமாளிக்கும் விதத்தில், புதிய தலைமுறை மாருதி வேகன் ஆர் கார் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த மூன்றாம் தலைமுறை வேகன் ஆர் கார் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது. இந்த சூழலில், இந்தியாவிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக புதிய வேகன் ஆர் காரின் உற்பத்தி துவங்கப்பட்டுவிட்டதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி வேகன் ஆர் காரின் டிசைன் தாத்பரியங்களில் பல மாற்றங்களை செய்து புதிய தலைமுறை மாடலாக மாற்றி இருக்கின்றனர். மேலும், டால் பாய் டிசைன் கான்செப்ட்டில்தான் இந்த புதிய மாடலும் தக்க வைக்கப்பட்டு இருப்பதால், உட்புறத்தில் அதிக ஹெட்ரூம் கொண்ட மாடலாக தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும்.

புதிய மாருதி வேகன் ஆர் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தொடர்ந்து தக்க வைக்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும் சிஎன்ஜி மாடலிலும் வர இருக்கிறது.

புதிய மாருதி வேகன் ஆர் காரில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், நவீன ஏசி சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெற இருக்கிறது. ஓட்டுனருக்கும், பயணிகளுக்கும் அதிக வசதிகளை கொண்ட பட்ஜெட் கார் மாடலாக இருக்கும்.

தற்போது விற்பனையில் இருக்கும் மாருதி வேகன் ஆர் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய மாடலும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் நடைமுறைக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்டதாக கட்டமைப்பு தரம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்கு உறுதுணையாக டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அதிவேகம் குறித்த எச்சரிக்கை, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற இருக்கின்றன.

புதிய மாருதி வேகன் ஆர் கார் நிச்சயம் தற்போதைய விற்பனை எண்ணிக்கையை தக்க வைக்கும் அளவுக்கு சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். நாளை அறிமுகமாக இருக்கும் புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு கடும் சந்தைப் போட்டியை தரும். விலை சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications








