மோடியை பின்பற்றினால் இதுதான் கதி.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு தக்க பாடம் புகட்டிய மக்கள்..
இந்திய பிரதமர் மோடியின் வழியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பின்பற்றி வருகிறார். ஆனால் இதற்கு பாகிஸ்தான் மக்கள் ஆரம்பத்திலேயே தக்க பாடம் புகட்டியுள்ளனர்.
இந்திய பிரதமர் மோடியின் வழியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பின்பற்றி வருகிறார். ஆனால் இதற்கு பாகிஸ்தான் மக்கள் ஆரம்பத்திலேயே தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) கடனில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான், பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக சமீபத்தில் பதவியேற்று கொண்டார்.

பிரதமராக பொறுப்பேற்ற உடனே கவர்ச்சிகரமான பல அறிவிப்புகளை இம்ரான்கான் வெளியிட்டார். இதில் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று அரசின் செலவினங்களை குறைப்பது. ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலமாக அரசின் செலவினங்களை கட்டுப்படுத்த முடியும் என இம்ரான்கான் கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் அறிவிப்பிற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்னவோ உண்மைதான். இதன்பின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் தேவைக்கு அதிகமாக உள்ள சொகுசு வாகனங்கள் அனைத்தையும் ஏலம் விட இம்ரான்கான் உத்தரவிட்டார்.

இதன்படி பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆடம்பர கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வரிசையாக ஏலம் விடப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பாகிஸ்தான் நாட்டு அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.

இந்த சூழலில் நேற்றும் (அக்.25) 18 கார்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வெறும் 2 கார்கள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. எஞ்சிய 16 கார்களும் விற்பனையாகவில்லை. இதனால் ஏலம் நடத்திய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

1986ம் ஆண்டு மாடல் கார் ஒன்றும், 2016ம் ஆண்டு மாடல் கார் ஒன்றும் என மொத்தம் 2 கார்கள் மட்டுமே விற்பனையானது. இதில், 1986ம் ஆண்டு மாடல் கார் இந்திய மதிப்பில் 1,75,000 ரூபாய்க்கும், 2016ம் ஆண்டு மாடல் கார் 18,10,000 ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டன.

இதுதவிர பாகிஸ்தான் பிரதமர் மாளிகைக்கு சொந்தமான 20 புல்லட் ஃப்ரூப் (Bulletproof) வாகனங்களும் தனியாக ஏலம் விடப்பட்டன. ஆனால் அவற்றில் ஒன்றை வாங்க கூட ஆள் இல்லை. எனவே இந்த 20 புல்லட் ஃப்ரூப் வாகனங்களையும் வேறொரு நாளில் மீண்டும் ஏலம் விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அனேகமாக இந்த 20 புல்லட் ஃப்ரூப் வாகனங்களும் வரும் நவம்பர் 6ம் தேதியன்று ஏலம் விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏலம் விடப்படும் அதிகாரப்பூர்வ தேதி குறித்து எந்த விதமான அறிவிப்பையும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக கடந்த 17ம் தேதி ஒரு ஏலம் நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான 49 சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டன. ஆனால் இதில் ஒரே ஒரு கார் மட்டுமே வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதர 48 கார்களும் ஏலம் போகவில்லை.

ஆடம்பர கார்கள் உள்பட தேவைக்கு அதிகமாக உள்ள அனைத்து வாகனங்களும் ஏலம் விடப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்தபோது ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தது என்பதை நிச்சயமாக மறுக்க முடியாது. ஆனால் நாளடைவில் வரவேற்பு குறைய தொடங்கி விட்டது என்பதே உண்மை.

இதற்கு ஏலம் விடப்படும் வாகனங்களில் போதிய அளவிலான வசதிகள் இல்லை, விலை மிகவும் அதிகம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுதவிர பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் நடவடிக்கைகளும் இதற்கு ஓர் முக்கிய காரணம் என பாகிஸ்தான் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆரம்பத்தில் தனக்கு வெறும் 2 கார்கள் மட்டும் போதும் என்றுதான் இம்ரான்கான் கூறியிருந்தார். ஆனால் அடுத்த சில நாட்களில், தனது போக்குவரத்து பயன்பாட்டிற்காக ஹெலிகாப்டரை பயன்படுத்த தொடங்கினார் இம்ரான்கான். இதனால் இம்ரான்கான் மீது மக்கள் அதிருப்தியடைந்தனர்.

2 கார்கள் மட்டும் போதும் எனக்கூறியிருந்த இம்ரான்கான் ஹெலிகாப்டர் பயன்படுத்த தொடங்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து பாகிஸ்தான் மக்கள் மீள்வதற்குள், அந்நாட்டின் அமைச்சர் பவாஸ் சவுத்ரி அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இம்ரான்கான் ஹெலிகாப்டர் பயன்படுத்துவது ஏன்? என்பதற்கு அவர் அளித்த விளக்கம்தான் அந்த அதிர்ச்சி ஏற்பட காரணம். இம்ரான்கான் சாலை மார்க்கமாக பயணித்தால் ஆகும் செலவை விட, ஹெலிகாப்டரில் பயணிக்கும்போது ஆகும் செலவு மிகவும் குறைவுதான் என்பதே பவாஸ் சவுத்ரி அளித்த விளக்கம்!

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்று சில மாதங்கள்தான் ஆகின்றன. சிக்கனக்காரர் என்ற பிம்பத்தை முன் நிறுத்தியிருந்த அவர் அதற்குள்ளாகவே ஆடம்பரம் என்ற சர்ச்சைக்குள் சிக்கி கொண்டுள்ளார். எனவே அவரது சிக்கன நடவடிக்கைகளை நம்ப பாகிஸ்தான் மக்கள் தயாராக இல்லை.

எனவேதான் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக வரிசையாக நடத்தப்பட்டு வரும் வாகன ஏலங்களை பாகிஸ்தான் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடியும் கூட ஆரம்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் நாட்டு மக்களுக்கு உறுதியளித்திருந்தார். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

அவ்வளவு ஏன்? ஆடம்பரம் என்ற சர்ச்சையில் பிரதமர் மோடியே பல முறை சிக்கினார். இந்திய பிரதமராக மோடி பதவியேற்று கொண்டது கடந்த 2014ம் ஆண்டில். அதற்கு அடுத்த ஆண்டில், அதாவது 2015ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தார்.

அப்போது இந்திய பிரதமர் மோடி, ஒபாமாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மோடி அணிந்திருந்த கோட்-சூட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு காரணம் அதன் விலைதான். ஆம், ஒபாமாவை சந்தித்தபோது மோடி அணிந்திருந்த கோட்-சூட்டின் விலை ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

இதுதவிர வெளிநாட்டு பயணம் ஒன்றின்போது இந்திய மதிப்பில் ரூ.13 லட்சம் மதிப்பிலான லோரோ பியானா ஜாக்கெட் என்ற கோட்டை பிரதமர் மோடி அணிந்திருந்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பு புகார்கள் கிளம்பியது என்பதை அவ்வளவு விரைவாக மறந்து விட முடியாது.

அத்துடன் பிரதமர் மோடி, அமைச்சர்களின் பயணங்களுக்காக அதிக தொகை செலவழிக்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களும், அதற்காக செலவழிக்கப்பட்ட தொகையும் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications