நாடு முழுவதும் குறிப்பிட்ட டோல்கேட்களை மூட முடிவு.. மோடி திடீரென கரிசனம் காட்டுவதற்கு காரணம் இதுதான்
உண்மைதான். நாடு முழுவதும் குறிப்பிட்ட டோல்கேட்களை மூடி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
உண்மைதான். நாடு முழுவதும் குறிப்பிட்ட டோல்கேட்களை மூடி விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. டோல்கேட்களில் அரங்கேற்றப்பட்டு வரும் கட்டண கொள்ளையே இதற்கு முக்கிய காரணம். எனவே டோல்கேட்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன் வைக்கப்பட்டு வருகிறது.

டோல்கேட்களின் முன்பாக மக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு எதற்கு அசைந்து கொடுப்பதாக இல்லை. டோல்கேட்களில் தொடர்ச்சியாக கட்டண கொள்ளை அரங்கேறி கொண்டேதான் உள்ளது.

விரைவாக பயணிக்க வேண்டும் என்பதற்காகதான் மக்கள் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்கு நிறுவப்பட்டுள்ள டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ததன் மூலமாக மிச்சம் பிடிக்கப்பட்ட நேரம் அங்கேயே வீணாகிவிடுகிறது. குறிப்பாக பெரு நகரங்களை ஒட்டியுள்ள டோல்கேட்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை உள்ளது.

இதன் காரணமாகவும் டோல்கேட்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக, புதிய டோல்கேட் கொள்கையை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது. இதில், பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போதை நிலையில் சுமார் 60 கிலோ மீட்டர்களுக்கு ஒரு டோல்கேட் வீதம் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு டோல்கேட்களுக்கு இடையேயான சாலையை பயன்படுத்துவதற்கு நாம் டோல் கட்டணம் செலுத்தி வருகிறோம்.

ஒரு வேளை நீங்கள் 60 கிலோ மீட்டரையும் பயன்படுத்துவதற்கு பதில், சாலையின் ஒரு சிறு பகுதியை பயன்படுத்தினால் கூட முழு டோல் கட்டணத்தையும் கட்டாயமாக செலுத்தியே ஆக வேண்டிய சூழல் தற்போது நிலவி வருகிறது.

உதாரணத்திற்கு ஒரு சிலர் ஒன்றிரண்டு கிலோ மீட்டர்களை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்கள். ஆனால் முழு டோல் கட்டணத்தையும் அவர்கள் செலுத்த நேர்ந்திருக்கும். எனவே இந்த முறையில்தான் தற்போது மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், சாலையை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறீர்களோ? அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். அதாவது ஒரு கட்டண சாலையை கடந்து, அடுத்த சாலையில் எவ்வளவு தொலைவு பயணிக்கிறீர்களோ? அதற்கு உண்டான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது.

'Pay as you use' என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது. மத்திய நிதி அமைச்சரான அருண் ஜெட்லி, நடப்பாண்டு தனது பட்ஜெட் உரையிலேயே, இந்த திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

தற்போது அந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் சுமார் 3 மாதங்களில் இந்த திட்டம் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வெளியேறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ள நெடுஞ்சாலைகளில் இந்த திட்டத்தை அமலாக்குவது கடினம் என கூறப்படுகிறது.

இதனிடையே புதிதாக கட்டப்படும் டோல்கேட்களை, நகர எல்லையில் இருந்து சற்று தள்ளி கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் போராட்டங்கள்தான். ஆம், போராட்டங்களின்போது டோல்கேட்கள் அடித்து துவம்சம் செய்யப்படுகின்றன.

எனவே புதிய டோல்கேட்களை நகர எல்லையில் இருந்து தள்ளி கட்டலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போராட்டம் எழுந்தது. அப்போது நகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி கிராமத்தில் திறந்தனர். அதேபோல்தான் இதுவும்.

இதுதவிர பாஸ்ட்டேக் முறையில் டோல் கட்டணம் செலுத்துபவர்களுக்கு தள்ளுபடி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாஸ்ட்டேக் முறையில் கட்டணம் செலுத்தினால் நெரிசலில் சிக்கி கொள்ள தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், 4 லேன்களுக்கு குறைவாக உள்ள நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதாவது 4 லேன்களுக்கும் குறைவாக உள்ள நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் டோல்கேட்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்கவுள்ளனர். அந்த காலக்கெடுவிற்கு பின் அந்த டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கப்படாது. அதாவது அந்த டோல்கேட்கள் மூடப்படுகின்றன.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த நடவடிக்கைகையை எடுத்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications








