ரேஞ்ச் இல்லையாம்.. டாடா, மஹிந்திரா கார்களை பயன்படுத்த மறுத்து அரசு அதிகாரிகள் போர்க்கொடி..
டாடா மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த மறுத்து அரசு அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டாடா மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த மறுத்து அரசு அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுற்றுச்சூழலுக்கு அவை ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும்படி மக்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கு முன் மாதிரியாக, அரசு சார்பில் வழங்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களை பல துறை அதிகாரிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

கார் எரிபொருள் அலவன்ஸாக அதிக அளவிலான தொகை அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே எலக்ட்ரிக் வாகனங்களை வழங்கி விட்டால், கார் எரிபொருள் அலவன்ஸை நிறுத்தி விடலாம் என்பதும் அரசின் திட்டமாக உள்ளது.

இதனிடையே Energy Efficiency Services Ltd (EESL) என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம், சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பராமரித்து வருகிறது. அந்த வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன்படி டாடா மோட்டார்ஸ் 350 டிகோர் எலக்ட்ரிக் கார்களையும், மஹிந்திரா அண்டு மஹிந்திரா 150 வெரிட்டோ எலக்ட்ரிக் கார்களையும், EESL நிறுவனத்திற்கு சப்ளை செய்துள்ளது. முதற்கட்டமாகதான் இந்த 500 கார்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 9,500 எலக்ட்ரிக் வாகனங்களை EESL நிறுவனம் வாங்கவுள்ளது. இதில், 40 சதவீத வாகனங்களை மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது. ஆனால் இந்த கார்களை பயன்படுத்த முடியாது என அரசு அதிகாரிகள் தற்போதே போர்க்கொடி தூக்கி விட்டனர்.

ஏனெனில் டாடா மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனங்கள் சப்ளை செய்த கார்களில், பேட்டரி தரம் மோசமாக இருப்பதாக அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர். உலக தரம் வாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்படவில்லை என்பது அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

எலக்ட்ரிக் வாகனங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கும் என்பதை ரேஞ்ச் என குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் இரண்டு கார்களும், ஒரு முறை சார்ஜ் செய்தால், 80-82 கிலோ மீட்டர்கள் வரை மட்டுமே செல்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

27-35 கிலோவாட் (kW) பேட்டரிகளே உலக தரம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. ஆனால் டாடா, மஹிந்திரா அண்டு மஹிந்திரா சப்ளை செய்த கார்களில் 17 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரிகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன.

மொத்தம் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் இந்த புகார் சிக்கலை உண்டாக்கியுள்ளது. எனவே 2வது டெண்டர் விடப்படுவதற்கு முன்பாக, அதற்கான நிபந்தனைகள் திருத்தி அமைக்கப்படும் என EESL அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அப்படி திருத்தி அமைக்கப்படும் நிபந்தனைகள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே மூன்றாவது டெண்டர் 2019ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்த கேள்விக்கு பதில் அளிக்க EESL அதிகாரிகள் மறுத்து விட்டனர். தற்போதைய நிலையில், சந்தையில் தரமான எலக்ட்ரிக் வாகனங்கள் கிடைக்காததே இதற்கு உண்மையான காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால்தான் டெண்டர் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








