இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸ்.... 'மாத்தி யோசி' திட்டத்துடன் பிஎஸ்ஏ குழுமம்!
இந்திய மார்க்கெட்டில் களமிறங்குவதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பிஎஸ்ஏ குழுமம், அதற்கான வியூகங்களில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.
இந்திய மார்க்கெட்டில் களமிறங்குவதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பிஎஸ்ஏ குழுமம், அதற்கான வியூகங்களில் தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன்படி, ரெனோ கார் நிறுவனம் பாணியில் இந்தியாவில் கார் மாடல்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன் மஹிந்திரா கூட்டணியை முறித்துக் கொண்டு இந்தியாவில் தனி ஆவர்த்தனத்தை துவங்கிய ரெனோ கார் நிறுவனம் முதலில் பிரிமியம் கார் மாடல்களை களமிறக்கியது. சிறப்பான பிராண்டு இமேஜை பெறும் விதத்தில் இந்த முறையை ரெனோ கையாண்டது. அதன்பிறகுதான் குறைவான விலை கார்களை அறிமுகம் செய்தது.

இதே பாணியில் தற்போது பீஜோ குழுமம் இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட தயாராகி வரும் பிஎஸ்ஏ குழுமம், இதற்காக, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் சிட்ரோவன் கார் நிறுவனத்தின் சி84 அல்லது சி-5 ஏர்க்ராஸ் ஆகிய இரண்டு மாடல்களில் ஒன்றை இந்தியாவில் களமிறக்க முடிவு செய்துள்ளது.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தனது பிராண்டை இந்தியர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கும், நம்பிக்கையையும் பெறுவதற்கும் திட்டமிட்டுள்ளது. அதன்பிறகுதான் குறைவான விலை கார் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது.

இதனிடையே, சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கார் ஆலையில் தனது கார் மாடல்களை அசெம்பிள் செய்வதற்கு பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான சிகே.பிர்லா குழுமத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. ஆனால், இதற்கான இறுதி அனுமதியை பிஎஸ்ஏ நிறுவனம் இன்னும் பெறவில்லை.

பிஎஸ்ஏ குழுமம் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கும் சிட்ரோவன் எஸ்யூவி மாடலானது ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான், விரைவில் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடா கரோக் போன்ற எஸ்யூவி மாடல்களுக்கு நிகரானதாகவும், எதிரானதாகவும் இருக்கும்.

இதனைத் தொடர்ந்து, மாருதி ஸ்விஃப்ட் காருக்கு நிகரான ஹேட்ச்பேக் கார் மாடலையும், ஹோண்டா சிட்டிக்கு நிகரான மிட்சைஸ் செடான் காரையும் அறிமுகம் செய்ய இருக்கிறது. தொடர்ந்து மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு நிகரான எஸ்யூவியும் பட்டியலில் இருக்கிறது.

எந்த ரக கார்களை களமிறக்கினால் வெற்றி பெற முடியும், அதற்கான சப்ளையர்களை பெறுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளதோடு, டிசிஎஸ் மற்றும் டாடா எஞ்சினியரிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கூட்டணி ஸ்மார்ட் கார் 1, ஸ்மார்ட் கார் 2, ஸ்மார்ட் கார் 3 என்ற குறியீட்டுப் பெயர்களில் கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் கால் பதிப்பதற்கு முன்னதாக நாட்டின் முக்கிய நகரங்களில் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் என்ற சிறப்பு மையங்களை அமைக்க இருக்கிறது. தகுதிவாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்ஏ குழுமத்தின் தயாரிப்புகள் பற்றி முழுமையான விபரங்களை பெற இந்த மையங்கள் உதவும்.

அடுத்ததாக நாடு முழுவதும் டீலர்களை நியமிக்கும் பணிகளை துவங்க இருக்கிறது. அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் 80 முதல் 100 ஷோரூம்களை திறக்கவும் திட்டமிட்டு இருக்கிறது. ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய வாகன தயாரிப்பு குழுமமாக விளங்கும் பிஎஸ்ஏ குழுமத்தின் கீழ் பீஜோ, சிட்ரோவன், டிஎஸ், ஓபெல் மற்றும் வாக்ஸ்ஹால் உள்ளிட்ட வாகன நிறுவனங்கள் செயல்படுகின்றன.


Click it and Unblock the Notifications








