போதையில் கார் ஓட்டிய வாலிபருக்கு ஸ்பாட்டிலேயே தண்டனை கொடுத்த மக்கள்.. ஆத்திரத்திற்கு காரணம் இதுதான்
குடிபோதையில் கார் ஓட்டிய வாலிபர் ஒருவருக்கு மக்கள் ஸ்பாட்டிலேயே கடுமையான தண்டனை வழங்கினர். மக்களின் இந்த ஆத்திரத்திற்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
குடிபோதையில் கார் ஓட்டிய வாலிபர் ஒருவருக்கு மக்கள் ஸ்பாட்டிலேயே கடுமையான தண்டனை வழங்கினர். மக்களின் இந்த ஆத்திரத்திற்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சராசரியாக சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழக்கின்றனர்.

எனவே சாலை விபத்துக்களின் காரணமாக, உலக அளவில் அதிக உயிர்களை பரிதாபமாக பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. குடி போதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களே விபத்துக்களுக்கு முக்கிய காரணங்கள்.

இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதே இல்லை. இதனை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் இதன் காரணமாகதான் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இதுதவிர இந்தியாவின் சட்ட திட்டங்களும் அவ்வளவு கடுமையாக இல்லை என்பதும் ஓர் முக்கிய காரணம். தவறு செய்யும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசார் 'கிடைப்பதை பெற்றுக்கொண்டு' அவர்களை அனுப்பி விடுவதாக ஒரு புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இந்திய அளவில் பார்த்தால் தமிழகத்தில்தான் மிக அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான். ஆனால் அரசாங்கமே இங்கு மது விற்கும் அவலம் நீடித்து வருகிறது.

எனவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் இதை எல்லாம் இம்மியளவும் கூட பொருட்படுத்தும் மனநிலையில் தமிழக அரசு இல்லை.

எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் காரணமாக தமிழகத்தில் சாலை விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டேதான் உள்ளன. இந்த சூழலில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டி ஒருவருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐசிஎப் அருகே வாலிபர் ஒருவர் காரில் வந்து கொண்டிருந்தார். அவர்தான் காரை ஓட்டி வந்தார். ஆனால் அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது சாலையில் சிறுமி ஒருவரும், அவரது சகோதரரும் சென்று கொண்டிருந்தனர்.

குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி வந்த வாலிபர், சாலையில் வந்து கொண்டிருந்த சிறுமி மற்றும் அவரது சகோதரர் மீது மோதினார். இதனால் அந்த சிறுமிக்கும், அவரது சகோதரருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

படுகாயம் அடைந்த சிறுமி மற்றும் அவரது சகோதரரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் குடிபோதையில் காரை ஓட்டி வந்த வாலிபரை சரமாரியாக தாக்க தொடங்கினர். அந்த வாலிபரை காப்பாற்ற ஒரு சிலர் முயன்றனர்.

ஆனால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த மக்கள் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. விடாப்பிடியாக அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கி கொண்டே இருந்தனர். இதனால் அந்த வாலிபரின் சட்டை எல்லாம் கிழிந்து விட்டது.

அப்போதும் மக்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அந்த வாலிபர் ஓட்டி வந்த காரை அடித்து நொறுக்கினர். எந்த தவறும் செய்யாத 2 பேரை படுகாயம் அடைய செய்ததற்காக, சம்பவ இடத்திலேயே வழங்கப்பட்ட தண்டனையாகவே இது பார்க்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை தந்தி டிவி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் சென்னை ஐசிஎப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடிபோதையில் வந்த வாலிபர் பெயரின் உள்ளிட்ட தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடப்பது தமிழகத்தில் இது ஒன்றும் முதல் முறையல்ல. ஆங்காங்கே அவ்வப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டி பலர் விபத்துக்களை ஏற்படுத்தி கொண்டுதான் உள்ளனர். அவர்களை பிடித்து மக்கள் தர்ம அடியும் கொடுத்து கொண்டுதான் உள்ளனர்.

ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே உள்ளன என்றால் அதற்கு என்ன அர்த்தம்? என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
ஹூண்டாய் சான்ட்ரோ-2018 காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications