அடிக்கடி ரிப்பேரான ரெனோ டஸ்ட்டர்... வாடிக்கையாளருக்கு ரூ.9.23 லட்சம் இழப்பீடு தர உத்தரவு!!
பழுதை உரிய நேரத்தில் சரிசெய்து தராத அந்த டீலர் இஸ்மாயிலுக்கு ரூ.9.23 லட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
பழுது ஏற்பட்ட ரெனோ டஸ்ட்டர் காரை உரிய நேரத்தில் சரிசெய்து தராத டீலருக்கு காருக்குண்டான தொகையை வாடிக்கையாளரிடம் திருப்பித் தர மங்களூர் நுகர்வோர் குறைதீர் மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மங்களூரை சேர்ந்தவர் இஸ்மாயில் சுன்னல். வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 26ந் தேதி புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி வாங்கினார். மங்களூரில் உள்ள ரெனோ நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் கார் ஷோரூம் மூலமாக அந்த காரை வாங்கினார்.

ரூ.8.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை கொண்ட அந்த ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு சாலை வரி, காப்பீடு உள்பட இதர செலவுகளை சேர்த்து ரூ.10.58 லட்சம் ஆன்ரோடு விலையாக கொடுத்து வாங்கினார்.

கார் வாங்கி 19,000 கிமீ வரை எந்த பிரச்னையும் இல்லை. இந்த நிலையில், இஸ்மாயில் தனது டஸ்ட்டரில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, காரின் பானட் பகுதியில் இருந்து பயங்கர சப்தம் வந்துள்ளது. காரை நிறுத்தி, பானட்டை திறந்து பார்த்தபோது ரேடியேட்டர் தனியாக கழன்று தொங்கிக் கொண்டிருந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த இஸ்மாயில் அந்த கார் வாங்கிய டிவிஎஸ் சுந்தரம் ஐயங்கார் அண்ட் சன்ஸ் ஷோரூமிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்குள்ள சர்வீஸ் சென்டரில் பிரச்னையை கூறி இருக்கிறார். மேலும், வாரண்டியில் மாற்றித் தர சொல்லி இருக்கிறார்.

ஆனால், டீலரில் இருந்தவர்கள் வாரண்டியில் மாற்றித் தர இயலாது என்று கூறியதுடன், ஒரு நூதன உபாயத்தையும் கூறி இருக்கின்றனர். காரை வேண்டுமென்று ஏதாவது ஒரு இடத்தில் மோதிவிடுங்கள். இன்ஸ்யூரன்ஸ் மூலமாக மாற்றித் தருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த இஸ்மாயில் வாரண்டியில் மாற்றித்தர சொல்லி இருக்கிறார். சர்வீஸ் மையத்தில் இருந்தவர்கள் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக நூல்கயிறை போட்டு ரேடியேட்டரை கட்டிக் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர். வேறு வழியின்றி இஸ்மாயில் காரை எடுத்து வந்துவிட்டார்.

அடுத்த சில மாதங்கள் எந்த பிரச்னையும் இல்லை. கார் 32,000 கிமீ தூரம் ஓடியிருந்தபோது மற்றொரு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. இந்த முறை சஸ்பென்ஷனில் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. மீண்டும் சர்வீஸ் மையத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ளவர்கள் பார்த்துவிட்டு, பழுதை சரிசெய்வதற்கு விட்டு விட்டு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர்.

இந்த நிலையில், காரை விட்டு விட்டு வந்த 12 நாட்களுக்கு பின்னர் மீண்டும் போய் பார்த்திருக்கிறார். அப்போது காரில் எந்த வேலையும் செய்யாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால், விரக்தியடைந்த இஸ்மாயில், டீலரின் அலட்சியப்போக்குக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார்.

இந்த விஷயம் தொடர்பாக, கையில் இருந்த ஆதாரங்களுடன் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்தார். மேலும், தான் வழக்கறிஞராக இருந்தபோதிலும், தனக்காக தீனானந்த் ராய் என்பவரை வழக்கறிஞராக வாதாட செய்தார்.

மூன்று ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு கூறப்பட்டு இருக்கிறது. ஆதாரங்கள் அடிப்படையில் குறைபாடுகளை சரிசெய்து தர தவறிய டிவிஎஸ் அய்யங்கார் அண்ட் சன்ஸ் ஷோரூம் ரூ.9.23 லட்சத்தை இஸ்மாயிலுக்கு வழங்க நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.65 லட்சம், ரிப்பேர் செலவாக இஸ்மாயில் கொடுத்த ரூ.25,000 மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.10,000 உள்பட ரூ.9.23 லட்சத்தை இஸ்மாயிலுக்கு தர உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு சரியான சேவையை வழங்காத டீலர்களுக்கு இது நிச்சயம் பாடம் புகட்டும் விஷயமாக ஆட்டோமொபைல் துறையினருக்கும், வாடிக்கையாளர்களும் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications








