ஷார்ட் கட்டில் போக நினைத்த க்விட் காருக்கு நேர்ந்த கதியை பார்த்தீங்களா?
ஆக்ரா- லக்ணோ எக்ஸ்பிரஸ் சாலையில், கார் ஓட்டுனர் தெரிந்து செய்த தவறால் 3 உயிர்கள் பறிபோனது. 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஆக்ரா- லக்ணோ எக்ஸ்பிரஸ் சாலையில் தவறான திசையில் சென்ற கார் மற்றொரு காருடன் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. ஒரு காரின் ஓட்டுனர் செய்த தவறால் 3 உயிர்கள் பறிபோனது. 5 பேர் படுகாயமடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம், எட்டவா மாவட்டத்திலுள்ள அஜீத் நகரை சேர்ந்தவர் வினித் அகர்வால்(58). இவர் தனது மனைவி சுஷ்மா அகர்வால்(56), நண்பர் ரகுநாத் பிரசாத் ஆகியோருடன் தனது ரெனோ க்விட் காரில் ஆக்ரா சென்றுள்ளார்.

ஆக்ரா- லக்ணோ எக்ஸ்பிரஸ் சாலையில் ஏறுவதற்காக ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கண்ணிமைக்கு நேரத்தில் ரெனோ க்விட் கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ரெனோ க்விட் காரில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்தனர். டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் நொய்டா வழக்கறிஞர் சங்க தலைவர் லால் மணி பாண்டே(42), அவரது மனைவி ஆஷா பாண்டே(40), அவரது மகன் அனூப் பாண்டே(12) ஆகியோர் பயணித்துள்ளனர். மேலும், லால் பாண்டேவின் உறவினர்கள் விஷால் திவாரி (23), நிதி திவாரி(13) ஆகியோரும் அந்த ஃபார்ச்சூனர் காரில் வந்துள்ளனர்.

லக்ணோவில் நடைபெற இருந்த திருமண நிகழ்ச்சிக்காக லால் பாண்டே தனது குடும்பத்தினருடன் சென்றபோது விபத்தில் சிக்கி இருக்கிறார். முதல்கட்ட விசாரணையில் ரெனோ க்விட் கார் ஆக்ரா- லக்ணோ எக்ஸ்பிரஸ் சாலையில் அருகிலிருந்த சாலை சந்திப்பை கடந்து மறுபுற சாலையை பிடிப்பதற்காக ஒருவழிப்பாதையில் தவறான திசையில் வந்துள்ளனர்.

அப்போது அதிவேகத்தில் வந்த ஃபார்ச்சூனர் கார் க்விட் கார் மீது மோதியிருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் ரெனோ க்விட் கார் பாதியாக நசுங்கியது. அதேபோன்று, மோதிய வேகத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவியும் கவிழ்ந்து பலத்த சேதமடைந்துள்ளது.

விதியை மீறி ஒருவழிப்பாதையில் தவறான திசையில் செல்லும் வாகன ஓட்டிகளால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. அந்த வாகன ஓட்டி மட்டுமின்றி, அவருடன் பயணிப்பவர்கள் மற்றும் எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் உலை வைத்து விடுகின்றனர்.

அனைத்து விரைவு சாலைகளிலும் இந்த சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. சில கிலோமீட்டர் சென்று மறுபுற சாலையை பிடிப்பதற்கு பதிலாக ஷார்ட் கட்டில் செல்ல நினைத்து, உயிருடன் விளையாடுகின்றனர்.

பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்ட ஆக்ரா- லக்ணோ நெடுஞ்சாலையில் விதியை மீறி முன்னேறிச் சென்ற ரெனோ க்விட் கார் ஓட்டுனர் செய்த தவறு காரணமாக, அவரது உயிர் பறிபோனதுடன், இன்று ஃபார்ச்சூனரில் வந்தவர்களின் வாழ்க்கையையும் சீரழித்துவிட்டது.

எனவே, சில கிலோமீட்டர் சுற்றினாலும் பரவாயில்லை. ஒருவழிப்பாதைகளில் தவறான திசையில் செல்வதை கைவிடுங்கள். இதில் உள்ள விபரீதத்தை புரிந்து கொண்டு சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம் என்பதை உணர்ந்து விவேகமுடன் செயல்படுங்கள்.

அதேபோன்று, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சாலை சந்திப்புகள் இருக்கும் இடங்களில் வேகத்தை குறைத்து செல்வது அவசியம். வலது மற்றும் இடது தடத்தைவிட்டு நடுவில் இருக்கும் தடத்தில் செல்வதும், மிதமான வேகத்தில் செல்வதும் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க உதவும்.
வாழ்க்கையானாலும், சாலையானாலும் ஷார்ட் கட் ரூட் அதளபாதாளத்தில் விட்டு விடும்!!
Source: TOI


Click it and Unblock the Notifications








