கிராஷ் டெஸ்ட்டில் மோசமான மதிப்பீட்டை பெற்ற ரெனோ லாட்ஜி!!
குளோபல் என்சிஏபி நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், ரெனோ லாட்ஜி கார் பூஜ்ய பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனோ லாட்ஜி காரின் பேஸ் மாடல்தான் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனோ லாட்ஜி காரை, அண்மையில் குளோபல் என்சிஏபி அமைப்பு க்ராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தி ஆய்வுகள் நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை தந்துள்ளது.

க்ராஷ் டெஸ்ட் ஆய்வு முடிவுகளில் ரெனோ லாட்ஜி கார் பூஜ்ய பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனோ லாட்ஜி காரின் பேஸ் மாடல்தான் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த மாடலில் ஏபிஎஸ், ஏர்பேக்குகள் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் பூஜ்ய மதிப்பீட்டையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில் இரண்டு நட்சத்திரங்களையும் பெற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்த காரில் சிறியவர் இருக்கை பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட், விபத்தின்போது பாதுகாப்பை தராமல், அபாயகரமாக இருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

ரெனோ லாட்ஜி காரின் பேஸ் மாடல் மற்றும் ஆர்எக்ஸ்இ மிட் வேரியண்ட்டுகளில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் இல்லை. ஆர்எக்ஸ்இசட் டாப் வேரியண்ட்டில் மட்டுமே டூயல் ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்படுகிறது. ஏர்பேக்குகள் இல்லாததே, பாதுகாப்பு தரம் என்ற ஒன்று இல்லாமல் போனதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்கள் பாதுகாப்பு தரத்தில் மிக மோசமான நிலையில் இருப்பதை கடந்த சில ஆண்டுகளாக குளோபல் என்சிஏபி அமைப்பு தனது க்ராஷ் டெஸ்ட் ஆய்வு முடிவுகளின் மூலமாக தோலுரித்து காட்டி வருகிறது.

இதனால், விழித்துக் கொண்ட மத்திய அரசு, கார் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க துவங்கி இருக்கிறது. மேலும், எடாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய எஸ்யூவி ரக கார்கள் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் ஓரளவு நல்ல மதிப்பீட்டை பெற்று சற்றே ஆறுதலை அளித்தன.

இந்த சூழலில், ரெனோ லாட்ஜி காரின் க்ராஷ் டெஸ்ட் முடிவுகள் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் தருவதாக இருக்கிறது. ஏற்கனவே, இந்தியாவின் பிளாக் பஸ்டர் மாடல்களில் ஒன்றாக கருதப்படும் ரெனோ க்விட் காரும் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்பு தர சோதனையில் பூஜ்ய மதிப்பீடடை பெற்று பல் இளித்தது.
எனினும், அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கும் புதிய பாதுகாப்பு தர விதிமுறைகள் மற்றும் புதிய க்ராஷ் டெஸ்ட் விதிமுறைகளால் இந்தியாவில் கார்களின் பாதுகாப்பு தரம் வெகுவாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








