இது நடந்தாலும் பரவாயில்லை என துணிந்து முடிவெடுத்த மத்திய அரசு.. அதிரடி உத்தரவுகளுக்கு காரணம் இதுதான்
சமீப காலமாக அதிரடியான சில உத்தரவுகளை, மத்திய அரசு வரிசையாக பிறப்பித்து கொண்டே வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சமீப காலமாக அதிரடியான சில உத்தரவுகளை, மத்திய அரசு வரிசையாக பிறப்பித்து கொண்டே வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விஞ்ஞானம், மருத்துவம் என உலக அளவில் பல்வேறு துறைகளில், இந்தியா வளர்ச்சியடைந்து கொண்டே வருகிறது. வல்லரசுகளாக உருவெடுத்துள்ள நாடுகள் கூட, இந்தியாவின் பிரம்மாண்ட வளர்ச்சியை இன்று அதிசயித்து பார்த்து கொண்டிருக்கின்றன.

ஆனால் இங்கு அதிகப்படியாக நடைபெற்று வரும் சாலை விபத்துக்கள், சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக, ஆண்டுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக சமீபத்தில் வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது இந்தியாவில் சாலை விபத்துக்களின் காரணமாக ஒவ்வொரு நாளும் சுமார் 821 பேர் உயிரிழந்து கொண்டுள்ளனர். இதுவே ஒரு மணி நேரத்திற்கு என கணக்கிட்டால், சுமார் 34 பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

அதிர்ச்சி அளிக்கும் வகையிலான இப்படி ஒரு அறிக்கையை, உலக சுகாதார நிறுவனம்தான் (WHO-World Health Organization) வெளியிட்டது. எனவே இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இங்கு சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதற்கு, பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தவறுவதே முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்களில் பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களும் படிப்படியாக கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி 2019ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும், ஏபிஎஸ் எனப்படும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS-Anti lock Braking System) கட்டாயமாக இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கமான பிரேக்கிங் சிஸ்டம்களை காட்டிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நன்கு மேம்பட்டது. எனவேதான் 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட அனைத்து இரு சக்கர வாகனங்களிலும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமானது, தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. லாரி மற்றும் பஸ்களில், ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட் சிஸ்டம் (Reverse Parking Alert System) கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்பதே அந்த உத்தரவு.

இதன்படி வாகனத்தின் பின்னால் சென்சார் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். வாகனம் ரிவர்ஸ் எடுக்கும்போது, அந்த வாகனத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில், வேறு ஏதேனும் வாகனம் இருந்தாலோ அல்லது ஆட்கள் யாராவது நின்று கொண்டிருந்தாலோ, உடனே சென்சார் அபாய ஒலி எழுப்பும்.

இதன்மூலம் அந்த வாகனத்தை இயக்கும் டிரைவர் சுதாரித்து கொண்டு, உடனே வாகனத்தை நிறுத்தி விடலாம். எனவே விபத்துக்களை தவிர்க்க, ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட் சிஸ்டம் உதவிகரமாக இருக்கும். எனவேதான் லாரி மற்றும் பஸ்களுக்கு இது கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. அதாவது 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உற்பத்தி செய்யப்படும் அனைத்து லாரி மற்றும் பஸ்களில், ரிவர்ஸ் பார்க்கிங் அலர்ட் சிஸ்டம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அதே சமயம், கார்கள் மற்றும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், கட்டாயமாக இடம்பெற வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த உத்தரவு வரும் 2019ம் ஆண்டு ஜூலை முதல் அமலாகிறது.

இதுபோன்ற அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களை, அனைத்து வாகன உற்பத்தி நிறுவனங்களும் கட்டாயமாக வழங்க வேண்டி இருப்பதால், தற்போது இருப்பதை காட்டிலும், வருங்காலங்களில் வாகனங்களின் விலை சற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் வாகனங்களில் விலை அதிகரித்தாலும் பரவாயில்லை என மத்திய அரசு அடுத்தடுத்து இது போன்ற அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே வருகிறது. சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்தே ஆக வேண்டும் என்பதே இதற்கு மிக முக்கியமான காரணம்.


Click it and Unblock the Notifications








