இந்த 13 மாவட்டங்களில் இன்னும் கவனம் அவசியம்... கலெக்டர், எஸ்பிக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு இதுதான்
சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழகத்தின் 13 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழகத்தின் 13 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் சாலை விபத்துக்களினால் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.

இதன்மூலம் சாலை விபத்துக்களின் காரணமாக உலகிலேயே அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிமுறை மீறல்களே பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு காரணம்.

இந்தியாவில் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒரு விஷயமாகி விட்டது. அதேபோல் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதே கிடையாது. அத்துடன் காரில் பயணம் செய்யும் பலருக்கு சீட் பெல்ட் அணியும் பழக்கமும் இல்லை.

இதுதவிர செல்போனில் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுவது, ராங் சைடில் வாகனங்களை இயக்குவது என இந்தியாவில் பெரும்பாலானோர் செய்யும் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. பெரும்பாலான சாலை விபத்துக்களுக்கு இவைதான் முக்கிய காரணங்களாக உள்ளன.

உலக அளவில் சாலை விபத்துக்களினால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் நிலையில், இந்திய அளவில் சாலை விபத்துக்களினால் அதிக உயிர்களை பறிகொடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதற்கு, தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மது கடைகள் முக்கியமான ஒரு காரணமாக பார்க்கப்படுகின்றன.

எனவே டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கைக்கு தமிழக அரசு இன்று வரை செவி சாய்க்கவே இல்லை.

என்றாலும் சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு பலன் கிடைத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை, சாலை விபத்துக்களின் காரணமாக மொத்தம் 59,277 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி-நவம்பர் வரையிலான கால கட்டத்துடன் ஒப்பிடுகையில், 25.35 சதவீதம் குறைவாகும்.

அதாவது தமிழ்நாட்டில், சாலை விபத்துக்களின் காரணமாக உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை 25.35 சதவீதம் என்கிற அளவிற்கு குறைந்துள்ளது. இந்த புள்ளி விபரங்களை தற்போது தமிழக போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ளது.

சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது எப்படி? என்பது குறித்து போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கூறுகையில், ''சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலமும், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு தீவிரமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே முன்பை காட்டிலும் தற்போது வாகன ஓட்டிகள் ஓரளவிற்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.

இதுதவிர சாலை பாதுகாப்பு நிதியின் மூலமாக, கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. அதாவது அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அங்கு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.

அத்துடன் ஒவ்வொரு மாதமும், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்களை வைத்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், சாலை விபத்துக்களை குறைக்க தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாகதான் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படும் தமிழக அரசு மீது ஏராளமான எதிர்மறை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை சற்றே குறைத்திருப்பது, தமிழக அரசுக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது.

அதே நேரத்தில் தமிழக அளவில் சாலை விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25.35 சதவீதம் குறைந்துள்ள சூழலிலும், 13 மாவட்டங்களில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருந்தபோதும் இந்த 13 மாவட்டங்களில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், பெரம்பலூர், சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், தர்மபுரி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகியவைதான் அந்த 13 மாவட்டங்கள். இதுதொடர்பான புள்ளி விபரங்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

Image Source: Tamil. The Hindu
மேற்கண்ட 13 மாவட்டங்களில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துள்ளது. என்றாலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இருந்தபோதும் அங்கு சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்கும்படி, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு போக்குவரத்து ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








