ரூ.8 கோடியில் இந்தியா வருகிறது ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி!!
ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி நவம்பர் மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புதிய ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆடம்பர கார்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் புதிய உயர்ரக ஆஃப்ரோடு எஸ்யூவியை சில மாதங்களுக்கு அறிமுகம் செய்தது. கல்லினன் என்ற பெயரிடப்பட்ட இந்த எஸ்யூவி உலக அளவில் பெரும் பணக்காரர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த சூழலில், இந்த புதிய எஸ்யூவியை வரும் நவம்பர் மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார் உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் பாரம்பரிய முக அமைப்புடன் புத்தம் புதிய உயர்வகை எஸ்யூவி மாடாலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது கல்லினன். மேலும், இது ஒரு உண்மையான ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்களுக்கு உரிய தகவமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் பெற்றிருக்கும் என்று ஏற்கனவே ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது.

செவ்வக வடிவிலான ஹெட்லைட், பாரம்பரியமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் க்ரில் அமைப்பு, வலிமையான பானட் அமைப்பு என முன்புறம் மிக பிரம்மாண்டமான ரோல்ஸ்ராய்ஸ் மாடலாக காட்சி தருகிறது. பக்கவாட்டில் பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகள் மற்றும் அதற்கு இயைந்து நிற்கும் 22 அங்குல சக்கரங்கள் எஸ்யூவி மாடலுக்குரிய கெத்தை வழங்குகின்றன.

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 600 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. பிற ரோல்ஸ்ராய்ஸ் மாடல்களை போலவே உட்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் மிக மிக சொகுசாகவும், ஆடம்பரமாகவும் இருக்கிறது.

ஓட்டுனர் உள்பட 5 பேர் பயணிப்பதற்கான இருக்கைகளை பெற்றிருக்கும் கல்லினன் எஸ்யூவியின் பின் இருக்கையில் மூன்று பேர் பயணிக்கலாம். ஆனால், இருவர் சவுகரியமாக அமர்ந்து பயணிப்பதற்கான விசேஷ இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது.

பிக்னிக் ஸ்பாட்டுகளில் நிறுத்திவிட்டு, பூட்ரூமில் இரண்டு பேர் அமர்ந்து கொண்டு மது அருந்துவதற்கும், இயற்கை அழகை ரசிப்பதற்கு ஏதுவாக இரண்டு குட்டி இருக்கைகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. சிறிய பட்டனை அழுத்தினால் இந்த இருக்கைகள் வெளிவந்துவிடும்.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபேன்டம் காரில் பயன்படுத்தப்படும் அதே 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின்தான் கலினன் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த எஸ்யூவி எஞ்சின் அதிகபட்சமாக 571 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட முதல் ரோல்ஸ்ராய்ஸ் மாடலாகவும் கல்லினன் வர இருக்கிிறது. மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆஃப்ரோடு சாகசங்களுக்கான பிரத்யேக டிரைவிங் மோடு தொழில்நுட்ப வசதியும், ஆஃப்ரோடு செல்லும்போது உள்ளே இருப்பவர்களுக்கு அதிர்வுகள் குறைவாக தெரியும் விதத்தில் விசேஷ சஸ்பென்ஷன் உள்ளது.

ரூ.8 கோடி விலையில் புதிய ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications