முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் ஷெல் ஈக்கோ மராத்தான் கார் பந்தயம்!
வரும் டிசம்பர் 6ந் தேதி ஷெல் ஈக்கோ மராத்தான் கார் பந்தயம் சென்னையில் நடைபெற இருக்கிறது. நாடுமுழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை சேர்ந்த 40 மாணவர் குழுக்கள் இந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளன.
வரும் டிசம்பர் 6ந் தேதி ஷெல் ஈக்கோ மராத்தான் கார் பந்தயம் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டி குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை உருவாக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், ஈக்கோ மராத்தான் என்ற கார் பந்தயத்தை ஷெல் ஆயில் நிறுவனம் சர்வதேச அளவில் நடத்தி வருகிறது. Shell Eco Marathon(SEM) என்று குறிப்பிடப்படும் இந்த போட்டியானது முதல்முறையாக 1939ம் ஆண்டு துவங்கப்பட்டது.

உலகின் மிக நீண்டகாலமாக மாணவர்களுக்கான கார் உருவாக்கத் திறனை சோதிக்கும் போட்டியாகவும் இது குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஷெல் ஈக்கோ மராத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

வேகத்தை வைத்து அளவிடாமல், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் புதுமையான தயாரிப்புகளையும், மாற்று எரிபொருள் கார்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டும் இந்த ஷெல் மராத்தான் கார் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட அளவு எரிபொருளில் எவ்வளவு தூரம் வாகனம் பயணிக்கிறது என்பதை வைத்து வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்த போட்டியில், இந்தியாவை சேர்ந்த மாணவர் குழுக்கள் பங்கேற்று வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் முதல்முறையாக ஷெல் ஈக்கோ மராத்தான் கார் பந்தயம் சென்னையில் நடத்தப்பட இருக்கிறது.

வரும் டிசம்பர் 6 முதல் 9ந் தேதி வரை நடக்க இருக்கும் இந்த கார் பந்தயத்திற்கு கடந்த ஜுன் மாதம் 11ந் தேதி முதல் ஆகஸ்ட் 28ந் தேதி வரை மாணவர் குழுக்களுக்கான முன்பதிவு நடந்தது. ஆசிய அளவில் நடைபெறும் இதில், நாடு முழுவதும் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களை சேர்ந்த 40 மாணவர் குழுக்கள் தங்களது தயாரிப்பு விபரத்துடன் பதிவு செய்து கொண்டன.

வரும் டிசம்பரில் சென்னையில் நடக்க இருக்கும் ஷெல் ஈக்கோ மராத்தான் போட்டியில், சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் குழு கலந்து கொள்ள இருக்கிறது. அதேபோன்று, வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைகழகத்தை சேர்ந்த டீம் அவெரேரா என்ற மாணவர் குழ தயாரித்துள்ள மூன்று சக்கர மின்சார வாகனம் பெரிதும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரை சேர்ந்த விஸ்வேஸ்வரய்யா பல்கலைகழக மாணவர் குழு உருவாக்கி இருக்கும் லிட்டருக்கு 100 கிமீ மைலேஜ் தரும் பைக்கும் இந்த போட்டியின்போது கவனத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் எண்ணற்ற புதுமையான கார்கள் இந்த போட்டியில் பங்கேற்ப இருப்பதால், சென்னை கார் பிரியர்கள் மத்தியில் இந்த போட்டி ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெறும் மாணவர் குழுக்களுக்கு சான்றிதழும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications