பெட்ரோல், டீசல் விலை... மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடி நிலையில் மக்கள்!!
பெட்ரோல், டீசல் விலை மீதான வரி விதிப்பு குறித்த அதிர்ச்சி புள்ளிவிபரங்கள் வெளியாகி இருக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதில் பொன்முட்டை இடும் வாத்து போல இதில் கைவைக்க மத்திய, மாநில அரசுகளுக்கு முழுமையாக மனது வரவில்லை.

டீசல் விலையை உயர்த்தினால் அத்தியாவசதிய பொருட்களின் விலை கணிசமாக உயரும் என்பது பாமரருக்கு கூட தெரிந்த விஷயம். ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் தங்களது கஜானா பாதித்து விடக்கூடாது என்பதில் மத்திய, மாநில அரசுகள் மிக கவனமாக செயல்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை மீதான வரி விதிப்பு குறித்த அதிர்ச்சி புள்ளிவிபரங்கள் வெளியாகி இருக்கின்றன. பெட்ரோல் மீது 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும், டீசல் மீது 40 சதவீதத்திற்கும் மேல் வரியாக விதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இதில், பெரிய கொடுமை என்னவெனில், 2013ம் ஆண்டு டீசலுக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையை விட தற்போது சற்று குறைவு. ஆனால், வரி மட்டும் பல நூறு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி டீசலுக்கான அடிப்படை விலை ரூ.41.80 ஆக இருந்தது. அதாவது, பெட்ரோல் நிலையத்திற்கு வழங்கப்படும் விலைதான் இது. ஆனால், கடந்த 21ந் தேதி நிலவரப்படி, மும்பையில் டீசல் அடிப்படை விலை ரூ.40.02 காசுகளாக இருக்கிறது. அதாவது, 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட ரூ.1.78 காசுகள் குறைவு.

2013ம் ஆண்டு அக்டோபர் 1ந் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் டீசலுக்கான டீலர் கமிஷன் ரூ.1.09 காசுகள் வழங்கப்பட்டது. மாநில அரசு வரி ரூ.6.09 காசுகளாகவும், மத்திய அரசு ரூ.3.56 காசுகள் வரியாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த 21ந் தேதி நிலவரப்படி, டீலர் கமிஷன் ரூ.2.52 காசுகளாக அதிகரித்துள்ளது. இது 131 சதவீதம் கூடுதல். அதேபோன்று, மாநில அரசு வரி லிட்டருக்கு ரூ.9.99 காசுகள் என்றும், மத்திய அரசு வரி ரூ.15.33 காசுகள் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசு வரி 64 சதவீதமும், மத்திய அரசு வரி 331 சதவீதமும் அதிகரித்துள்ளது.

டீசலைவிட பெட்ரோல் கதை இன்னும் மோசம். கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 1 நிலவரப்படி, மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான அடிப்படை விலை ரூ.52.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. டீலர் கமிஷன் ரூ.1.79 என்றும், மாநில அரசு வரி ரூ.12.68 என்றும், மத்திய அரசு வரி ரூ.9.48 என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த 21ந் தேதி நிலவரப்படி, டீலருக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.37.22 காசுகள் என்ற அடிப்படை விலையில் வழங்கப்படுகிறது. அதாவது, 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது பெட்ரோலுக்கான அடிப்படை விலை 29 சதவீதம் குறைந்துள்ளது.

ஆனால், வரி எக்கச்சக்கமாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு டீலர் கமிஷன் ரூ.3.62 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 102 சதவீதம் அதிகம். மாநில வரி ரூ.16.29 காசுகளாக இருக்கிறது. இது 28 சதவீதம் உயர்வு. மத்திய அரசு ரூ.19.48 காசுகள் வரி நிர்ணயம் செய்துள்ளது. இது 105 சதவீதம் உயர்வு.

2013ம் ஆண்டு பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை விலையுடன் தற்போதைய நிலவரத்தை ஒப்பிடும்போது, விலை குறைவாக உள்ளது. ஆனால், வரி மேல் வரி போட்டு தாளித்து, வருவாயை கணிசமாக உயர்த்திக் கொண்டுள்ளன மத்திய, மாநில அரசுகள். அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களுக்கான பெட்ரோல் விலை மிக கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

மறுபுறத்தில், டீசல் விலையிலும் வரியை போட்டு தாளித்து விலைவாசி உயர்வு ராக்கெட் வேகத்தில் செல்வதற்கு மூலதார காரணமாக மத்திய, மாநில அரசுகள் மாறி இருக்கின்றன. மக்களை பற்றி கிஞ்சித்தும் சிந்திக்காமல் இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது இந்த புள்ளி விபரங்கள் மூலமாக தெளிவாக தெரிய வருகிறது.

வரி விதிப்பதில் தவறில்லை. அது நியாயமான அளவில் இல்லாம், மக்களை வாட்டி வதைக்கும் அளவுக்கு வரியை தொடர்ந்து உயர்த்தி வருவது பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனத்தை பெற்றிருக்கிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டு வருவதற்கும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனவே, இந்த விஷயத்தில் விலை குறைப்பு என்பது மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications








