மல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா -1 அணி விற்பனை!!
பல்லாயிரம் கோடியை ஏப்பம் விட்டு லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையாவின் ஃபோர்ஸ் இந்தியா அணி விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.
பல்லாயிரம் கோடி ரூபாயை வங்கியில் ஏப்பம் விட்டு லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையா பங்குதாரராக உள்ள ஃபோர்ஸ் இந்தியா அணி விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

இங்கிலாந்திலுள்ள சில்வர்ஸ்டோனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா- 1 அணியில் விஜய் மல்லையா மற்றும் சுப்ரதா ராய் ஆகியோர் தலா 42.5 சதவீத பங்குகளை வைத்திருக்கின்றனர். மீதமுள்ள 15 சதவீத பங்குகள் மைக்கேல் மோலிடம் உள்ளது.

இந்த நிலையில், ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா-1 அணி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. விரைவில் திவால் அறிக்கையை பதிவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா-1 அணியை கனடாவை சேர்ந்த முதலீட்டாளரும், ஃபெராரி கார் சேகரிப்பாளருமான லாரன்ஸ் ஸ்ட்ரோல் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும், லாரன்ஸ் ஸ்ட்ரோலின் மகன் லான்ஸ் ஸ்ட்ரோல் வில்லியம்ஸ் ஃபார்முலா-1 கார் பந்தய அணியில் முக்கிய வீரராக பங்கேற்று வருகிறார். ஆனால், இந்த ஆண்டு வில்லியம்ஸ் அணியின் செயல்திறன் சிறப்பாக இல்லை. இதனால், வேறு அணிக்கு மாறுவதற்கு லான்ஸ் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஃபோர்ஸ் இந்தியா அணியை வாங்கி, அந்த அணி சார்பில் பங்கேற்க லான்ஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. மேலும், புதிய முதலீட்டாளருடன் புது எழுச்சியுடன் அடுத்த ஆண்டு ஃபார்முலா-1 பந்தய களத்தில் ஃபோர்ஸ் இந்தியா அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், ஃபோர்ஸ் இந்தியா அணியை ஸ்ட்ரோல் முழுமையாக கைப்பற்றிவிட்டாரா அல்லது குறிப்பிட்ட அளவு பங்குகளை மட்டுமே வாங்கி இருக்கிறாரா என்பது குறித்த தகவல் இல்லை. இதுகுறித்து ஸ்ட்ரோல் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் மல்லையா," ஃபோர்ஸ் இந்தியா உரிமையாளர் குறித்து பலர் பல்வேறு விமர்சனங்களையும், கருத்துக்களையும் கூறி வருகின்றனர். இது பல ஆண்டுகளாக சொல்லப்படும் செய்திதான்.

ஃபோர்ஸ் இந்தியா அணி விற்பனைக்கு என்று எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், அணியை வாங்குவதற்கு ரொக்கத்துடன் யாரேனும் ரொக்கத்துடன் வருவார்களேயேனால், முதலில் நான் எனது முதலீட்டாளர்களிடம்தான் பேச்சு நடத்துவேன்.

அதுவரை வதந்தி என்பது வதந்திதான் என்று கூறி இருக்கிறார். இதனிடயே, ஃபோர்ஸ் இந்தியா அணி கைமாறிவிட்டதாக ஐரோப்பிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








