டீலரின் ஹேண்ட்லிங் சார்ஜ் மோசடியை அம்பலப்படுத்திய டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்!
ஹேண்ட்லிங் சார்ஜ் என்ற பெயரில் டாடா டீலர் செய்த மோசடியை வாடிக்கையாளர் ஒருவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
Recommended Video

கார் வாங்கும்போது டீலர்களில் கொடுக்கப்படும் கொட்டேஷனில் ஹேண்ட்லிங் சார்ஜ் என்று குறிப்பிட்டு ஒரு கணிசமான தொகையை வாடிக்கையாளர்களிடம் இருந்து டீலர்கள் கறந்து வருகின்றனர். இது சட்ட விரோதமானது என்று நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தீர்ப்புகள் கூட அளிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த சூழலில், டாடா டீலரில் கையாளும் கட்டணம் என்று குறிப்பிட்டு மோசடி செய்த சம்பவத்தை வாடிக்கையாளர் ஒருவர் அம்பலப்படுத்தி இருக்கிறார். அத்துடன் விடாமல் அதனை மீடியா பார்வைக்கும் கொண்டு வந்துள்ளார். இந்த மோசடியிலிருந்து அவர் எளிதாக தப்பிய விதம் குறித்து பார்க்கலாம்.

அஸாம் மாநிலம் கவுகாத்தி நகரை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள காமக்யா மோட்டார்ஸ் என்ற அங்கீகரிக்கப்பட்ட டாடா டீலரில் நெக்ஸான் எஸ்யூவியை அண்மையில் புக்கிங் செய்துள்ளார்.

டீலரில் கொடுக்கப்பட்ட விலை விபர பட்டியலை பார்த்தபோது, அதில் ஹேண்ட்லிங் சார்ஜ் என்ற பெயரில் ரூ.8,500 சேர்க்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து டீலர் பணியாளர்களிடம் வினவி இருக்கிறார் அந்த வாடிக்கையாளர். ஆனால், ஹேண்ட்லிங் சார்ஜ் கட்டாயம். அதனை கட்டினால்தான் கார் வாங்க முடியும் என்று கூறி இருக்கின்றனர்.

ஹேண்ட்லிங் சார்ஜ் என்பது சட்டவிரோதமானது என்பதை ஏற்கனவே அறிந்திருந்த அந்த வாடிக்கையாளர் இதுகுறித்து டாடா நிறுவனத்திற்கு இ-மெயில் மூலமாக கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் டீலர் விபரங்களை குறிப்பிட்டு, ஹேண்ட்லிங் சார்ஜ் என்பது கட்டாயமா? என்று வினவியிருந்தார்.

அந்த டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர் சேவை மைய இ-மெயில் முகவரிக்கு அந்த கடிதத்தை அனுப்பியதோடு, அதில் டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி குவென்ட்டர் பட்செக்கையும் இணைத்திருந்தார்.

ஆச்சர்யம் தரும் விதத்தில், அந்த வாடிக்கையாளர் அனுப்பிய கடிதத்திற்கு, டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலிருந்து அன்றைய தினமே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் வந்தது.

மேலும், மறுநாளே சம்பந்தப்பட்ட டீலரிடமிருந்து பதில் வந்துள்ளது. ஹேண்ட்லிங் சார்ஜிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளனர். ஹேண்ட்லிங் சார்ஜ் என்ற கட்டணம் சட்டவிரோதமாக குறிப்பிடப்பட்டாலும், பல டீலர்களில் இது எழுதப்படாத சட்டம்போல கட்டயாமாக வசூலிக்கப்படுகிறது.

இதன்மூலமாக, டீலர்களும் கணிசமான அளவு கல்லா கட்டுகின்றனர். அனைத்து டீலர்களிலுமே இதனை வசூலிப்பதுடன், மாதத்திற்கு லட்சக்கணக்கில் வாடிக்கையாளர் பணத்தை அனாமத்தாக பிடுங்குகின்றனர். விழிப்புடைய வாடிக்கையாளர் மட்டும் பேரம் பேசி ஓரளவு குறைக்கின்றனர்.

வாடிக்கையாளர் சேவையில் முன்னிலையில் இருக்கும் மாருதி நிறுவனம் உள்பட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த விஷயத்தில் போக்குவரத்து அலுவலகமும், கார் நிறுவனங்களும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும்.
Via- Rushlane


Click it and Unblock the Notifications








