புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் ரிலீஸ் விபரம்!!
டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடல் வரும் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இது இந்த எஸ்யூவியின் மீதான ஆவலை அதிகப்படுத்தி இருக்கிறது.
கிரேட்டர் நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எச்5எக்ஸ் என்ற எஸ்யூவி கான்செப்ட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அசத்தலான டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் என அந்த மாடலின் சிறப்பம்சங்கள் வேற லெவலில் இருந்ததாக நாம் எழுதியிருந்தோம்.

இந்த நிலையில், டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. அடிக்கடி ஸ்பை படங்களும் வெளியாகி வருகின்றன. எனவே, இந்த காரை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் படுதீவிரமாக இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த சூழலில், தற்போது டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியின் தயாரிப்பு நிலைக்கு உகந்த மாடல் வரும் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இது இந்த எஸ்யூவியின் மீதான ஆவலை அதிகப்படுத்தி இருக்கிறது.

டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா பிளாட்ஃபாரமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே தாத்பரியங்கள் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்கள் வடிவமைக்கப்படும் இம்பேக்ட் டிசைன் 2.0 என்ற புதிய வடிவமைப்புக் கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், மிக அசத்தலாக இருக்கிறது. கான்செப்ட் நிலையாக காட்சி தந்த மாடலுக்கும் தயாரிப்பு நிலை மாடலுக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருக்காது என்று தெரிகிறது.
புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவியில் முக்கிய சிறப்பம்சமாக ஃபியட் நிறுவனத்திடமிருந்து 2.0 லிட்டர் டீசல் எஞ்சினை சப்ளை பெற்று பொருத்த இருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த எஞ்சின் 140 முதல் 170 பிஎச்பி இடையிலான பவரை வெளிப்படுத்தும் திறனுடன் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். இந்த மாடலில் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஜீப் காம்பஸ் எஸ்யூவியிலும் இதே டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்படுகிறது.

இந்த எஸ்யூவியில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் டிரைவிங் மோடுகள் தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற இருக்கின்றன. போட்டியாளர்களை விஞ்சும் விதத்தில், அட்டகாசமான வசதிகளையும், பிரிமியம் அம்சங்களையும் பெற்றிருக்கும்.

அடுத்த ஆண்டு இறுதியில் புதிய டாடா எச்5எக்ஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் 5 சீட்டர் மாடலிலும், பின்னர் 7 சீட்டர் மாடலிலும் வரும் என்பது தகவலாக உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேர் போட்டியான மாடலாக இருக்கும். அதேநேரத்தில், க்ரெட்டாவை விட அதிக இடவசதி கொண்ட எஸ்யூவி மாடலாக இது வாடிக்கையாளர்களிடத்தில் முதன்மை பெறும்.
Source: Rushlane


Click it and Unblock the Notifications