ஜனவரியில் பொது பார்வைக்கு வருகிறது புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி!!
வரும் ஜனவரி 20ந் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் மராத்தான் போட்டியில் லீட் கார் எனப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டும் காராக புதிய டாடா ஹேரியர் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வரும் ஜனவரியில் புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் டாடா எச்5எக்ஸ் என்ற கான்செப்ட் எஸ்யூவி மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த எஸ்யூவியின் டிசைன் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில், இந்த எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் ஹேரியர் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.

மேலும், தற்போது இந்த எஸ்யூவி நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைத்து தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், டாடா ஹேரியர் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வரும் ஜனவரி 20ந் தேதி மும்பையில் நடைபெற இருக்கும் மராத்தான் போட்டியில் லீட் கார் எனப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டும் காராக புதிய டாடா ஹேரியர் பயன்படுத்தப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக முதல்முதலாக டாடா ஹேரியர் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்ட, ஜாகுவார் லேண்ட்ரோவர் டி8 பிளாட்ஃபார்மின் அடிப்படையில், இந்தியாவுக்கான அம்சங்களை மனதில் கொண்டு இந்த ஒமேகா பிளாட்ஃபார்மில் டாடா கார்கள் உருவாக்கப்படும். எதிர்காலத்தில் டாடா மோட்டார்ஸ் உருவாக்க இருக்கும் 4.3 மீட்டர் நீளமுடைய கார்கள் இந்த பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்படும்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியின் டிசைன் மிக சிறப்பாக நவீன யுக அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு இறுக்கிறது. ஸ்பிளிட் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். முன்புற, பின்புற பம்பர்களில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஏராளமான பிரிமியம் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. லெதர் இருக்கைகள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, க்ரூஸ் கன்ட்ரோல், ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஸ்யூவிக்கான மேனுவல் கியர்பாக்ஸ் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட இருக்கிறது.

புதிய டாடா ஹேரியர் எஸ்யூவி அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. முதலில் 5 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலானது ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் ஆகிய கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து விலை நிர்ணயிக்கப்படும்.

பின்னர் 7 சீட்டர் மாடலிலும் வெளிவர இருக்கிறது. 7 சீட்டர் மாடலானது புதிய பெயரில் வெளிவர இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி பிரிமியம் மாடலாகவும், டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட பிரியமிம் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாகவும் இருக்கும்.


Click it and Unblock the Notifications








