இந்தியாவை ஏளனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க களத்தில் குதித்த டாடா மோட்டார்ஸ்... குவியும் பாராட்டு
இந்தியாவை ஏளனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் களத்தில் குதித்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டுள்ளன.
இந்தியாவை ஏளனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் களத்தில் குதித்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டுள்ளன.

மக்கள் தொகை அடிப்படையில், சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் 2வது மிகப்பெரிய நாடு இந்தியா. இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடிக்கும் அதிகம். இவ்வளவு அபரிமிதமான மனித வளத்தை கொண்டிருந்தாலும், ஒலிம்பிக்கில் இந்தியா சோபிக்க தவறுகிறது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா என வர்ணிக்கப்படும் ஒலிம்பிக் நடைபெறும் சமயத்தில் அனைவரின் கவனமும் அதன் மீதே குவிந்திருக்கும். இப்பேர்பட்ட ஒரு விளையாட்டு நிகழ்வில், 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஒரு நாடு தொடர்ச்சியாக தடுமாறுகிறது.

இதன் காரணமாக பலரின் ஏளன பேச்சுக்களுக்கு இந்தியா ஆளாகி கொண்டிருக்கிறது. 1900ம் ஆண்டில் இருந்து, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை 'குவித்த' மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 28.

அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள், ஒரு ஒலிம்பிக் தொடரில், ஒரு சில நாட்களில் எளிதாக வென்று விடும் பதக்கங்களின் எண்ணிக்கை இது. இதைதான் இந்தியா, 118 ஆண்டுகளாக போராடி வென்றிருக்கிறது!!

ஒலிம்பிக் மட்டுமல்ல. எந்த ஒரு மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு என்றாலும், இந்தியா பெரிய அளவில் சோபிக்க தவறுவது வாடிக்கையாகி விட்டது. இந்தியர்கள் மத்தியில் மதம் போல் காலூன்றி இருக்கும் கிரிக்கெட் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

ஆனால் இந்த நிலை மாற வேண்டும் என இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புகிறது. இதற்காக 'டாடா மோட்டார்ஸ் எலைட் மல்யுத்த வீரர்கள் மேம்பாட்டு திட்டம்' என்கிற முயற்சியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''மல்யுத்தத்தை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்க முடியும். இதற்காகதான் 'டாடா மோட்டார்ஸ் எலைட் மல்யுத்த வீரர்கள் மேம்பாட்டு திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போன்ற பெரிய பெரிய விளையாட்டு திருவிழாக்களில், நமது மல்யுத்த வீரர்கள், இந்தியாவிற்கு அதிக பெருமையை கொண்டு வந்து சேர்க்க இத்திட்டம் உதவி செய்யும். இத்திட்டத்தின் கீழ் மல்யுத்த வீரர்களுக்கு, உயர்தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.

புகழ்பெற்ற வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர அனுபவம் வாய்ந்த பிசியோதெரபிஸ்ட்கள், மனோதத்துவ ஆலோசகர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆகியோரும் நியமனம் செய்யப்படுவார்கள்.

மல்யுத்த வீரர்களிடம் பேசி அவர்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முயன்றோம். அவர்களிடம் பேசிய பிறகுதான் இந்த திட்டம் உருவானது. ஒலிம்பிக் போன்ற பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் நாம் சாதிக்க வேண்டுமென்றால், இன்னும் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் மல்யுத்தம் பிரபலமாகதான் உள்ளது. ஆனால் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால், நல்ல திறமையான வீரர்களை கண்டறிய முடியும். இதற்கு 'டாடா மோட்டார்ஸ் எலைட் மல்யுத்த வீரர்கள் மேம்பாட்டு திட்டம்' நிச்சயமாக உதவி செய்யும்.

இந்தியாவில் மல்யுத்தத்தை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காக, இந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் (Wrestling Federation of India), டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெய்கில் பிஸ்னஸ் யூனிட் (Commercial Vehicle Business Unit) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

முதற்கட்டமாக 2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர்களை தயார் செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதன்பின் 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும், திறமையான வீரர்களை கண்டறிவோம்.

பல்வேறு எடைப்பிரிவுகளை சேர்ந்த ஆண், பெண் என 2 அணியினருக்கும் எங்கள் உதவிகள் கிடைக்கும். ஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டிகளில் இந்தியா இன்னும் நன்றாக செயல்பட இந்த திட்டம் நிச்சயமாக உதவி செய்யும் என நம்புகிறோம்'' என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக மல்யுத்தத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2012, 2016ம் ஆண்டுகளில் முறையே லண்டன், ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளில், சுஷில் குமார், யோகேஸ்வர் தத், சாக்ஸி மாலிக் ஆகிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








