மின் கம்பத்தில் மோதிய டாடா நெக்ஸான்... இந்த முறையும் அடடே, மூன்று ஆச்சர்ய குறி!!!
கோவாவில் உள்ள நான்கு வழிச் சாலை ஒன்றில் சென்ற புத்தம் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து, மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.
கார் ஓட்டும்போது கவனக்குறைவும், அதிவேகமும் அழையா விருந்தாளிகளாக விபத்துக்கு வழி வகுக்கும் என்பதை விளக்க பல சம்பவங்களை சான்றாக வழங்கி இருக்கிறோம். இந்த சூழலில், அதிவேகத்தால் ஏற்பட்ட மற்றொரு கார் விபத்து நமக்கு மீண்டும் எச்சரிக்கையை தந்துள்ளது.

கோவாவில் உள்ள நான்கு வழிச் சாலை ஒன்றில் புத்தம் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி அதிவேகமாக சென்றுள்ளது. நான்கு வழிச்சாலை காலியாக இருந்ததால், ஓட்டுனர் காரை அதிவேகத்தில் செலுத்தியதாக தெரிகிறது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த நெக்ஸான் எஸ்யூவி சாலைக்கு நடுவில் உள்ள தடுப்புப் பகுதியில் இருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் டாடா நெக்ஸான் காரின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. கூரை, பின்புறம் வரை அந்த மோதல் தாக்கத்தால் பலத்த சேதமடைந்துள்ளது.
குறுக்கே ஏதேனும் வாகனம் அல்லது பாதசாரி வந்ததால், ஓட்டுனர் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், அந்த கார் தற்காலிக பதிவு எண்ணுடன் இருப்பதால், டீலர் பணியாளர்களால் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

கார் விபத்துக்குள்ளானதும் அதில் இருந்த மூன்று பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், கார் கதவுகள் திறந்து கொண்டதால், அவர்கள் எளிதாக வெளியேறியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர்.

இதுபோன்ற விபத்துக்களின்போது கார் கதவுகள் நசுங்கி பூட்டிக் கொண்டால், காரில் பயணித்தவர்கள் அவசர சமயத்தில் வெளியேற முடியாது. இந்த காரில் கதவுகள் திறந்து கொண்டதால் எளிதாக வெளியேறி இருப்பது நல்ல விஷயம்.

ஒவ்வொரு காரின் இயங்கு தன்மை மற்றும் சமநிலை ஆகியவை மாறுபடும். எனவே, நீண்ட கார் ஓட்டிய அனுபவம் இருந்தபோதிலும், புதிய காரை ஓட்டும்போது நிதானம் அவசியம். சில நாட்கள் ஓட்டி பிடிபட்ட பிறகு சற்று வேகத்தை கூட்டுவது பயன்தரும்.

மேலும், நகரங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலைகளில் கார் ஓட்டும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சிறு கவனக் குறைவு கூட விபத்துக்கு வழிகோலும்.

அத்துடன், குடியிருப்பு உள்ள பகுதிகளில் வழியாக செல்லும் நான்கு வழிச்சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தாலும் கூட அதிவேகத்தில் செல்வதை அறவே தவிர்ப்பது அவசியம். நிதானமான வேகத்தில் கடந்து சென்று குடியிருப்புப் பகுதிகளை தாண்டிய பிறகு வேகத்தை கூட்டிச் செல்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

பொதுவாக ஓட்டுனர்களுக்கு அதிக நிதானமும், சகிப்புத் தன்மையும் இருக்க வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியாத விஷயமாகவிடும். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு இருப்பதே பெரிய விஷயம்.
Source: Team-BHP


Click it and Unblock the Notifications








