கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்தியாவின் முதல் கார் டாடா நெக்ஸான்!
குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் பெற்றிருக்கிறது. டாடா நெக்ஸான் எஸ்யூவியில் சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அ
குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற முதல் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் பெற்றிருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் டாடா நெக்ஸான் எஸ்யூவியை குளோபல் என்சிஏபி அமைப்பு கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தி முடிவுகளை வெளியிட்டது. அதில், 4 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தியது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் மிக பாதுகாப்பான மாடலாகவும் பெயர் பெற்றது.

இந்த நிலையில், டாடா நெக்ஸான் எஸ்யூவியில் சீட் பெல்ட் ரிமைன்டர் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. மேலும், பக்கவாட்டு சோதனை மீதமிருந்தது. இந்த நிலையில், பக்கவாட்டு மோதல் சோதனையும் நடத்தப்பட்டு இப்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், டாடா நெக்ஸான் எஸ்யூவி அதிகபட்சமான 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று அசத்தி இருக்கிறது.

கடந்த ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட முடிவில் பெரியவர்களுக்கான பாதுகாப்புக்கு வழங்கப்படும் அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 13.56 புள்ளிகளை பெற்றிருந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி இந்த முறை 16.06 புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது.

இன்று (டிச.7) முதல் உற்பத்தி செய்யப்படும் டாடா நெக்ஸான் எஸ்யூவிகள் இந்த 5 ஸ்டார் ரேட்டிங்கிற்கு இணையான பாதுகாப்பு தரத்தை பெற்றிருக்கும் என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். மேலும், குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் அதிக மதிப்பீடு பெற்ற இந்திய தயாரிப்பு கார் மாடல் என்ற பெருமையையும் டாடா நெக்ஸான் பெற்றிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டின்போது டாடா நெக்ஸான் காரின் உடல்கூடு அமைப்பு வலிமையானதாக குறிப்பிடப்பட்டது. அத்துடன், பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களிலும் நல்ல மதிப்பீட்டை பெற்றது. இந்த நிலையில், தற்போது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் அதிகபட்சமான 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருக்கிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியி் எக்ஸ்இ என்ற பேஸ் வேரியண்ட் முதல் எக்ஸ்இசட் ப்ளஸ் என்ற டாப் வேரியண்ட் வரை அனைத்து வேரியண்ட்டுகளிலும் இரண்டு ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படுகிறது. எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் கொடுக்கப்படுகின்றன.

டாடா நெக்ஸான் எஸ்யூவி 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருப்பதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, குளோபல் என்சிஏபி அமைப்பின் பொது செயலாளர் டேவிட் வார்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்திய கார்களின் பாதுகாப்பில் இது புதிய மைல்கல் என்றும் தெரிவித்துள்ளார். பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக இந்த சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களை தயாரிக்க முடியும் என்பதை டாடா நெக்ஸான் எஸ்யூவி நிரூபித்துள்ளதாக ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலமாக, பிற கார் நிறுவனங்களும் பாதுகாப்பு அம்சங்களில் இனி கூடுதல் கவனம் செலுத்துவதற்கு இது வழிகோலும் என்றால் மிகையாகாது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு எமது வாழ்த்துகள்!


Click it and Unblock the Notifications