27 ஆண்டு கால ஜிப்ஸிக்கு பை பை.. பாகிஸ்தானை மிரட்டும் இந்திய ராணுவத்தின் புது கார்.. அசத்தல் வசதிகள்
இந்திய ராணுவம், கடந்த 27 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஜிப்ஸிக்கு குட் பை சொல்லியுள்ளது. அதற்கு பதிலாக, டாட்டா ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்களை, இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கியுள்ளது.
இந்திய ராணுவம், கடந்த 27 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஜிப்ஸிக்கு குட் பை சொல்லியுள்ளது. அதற்கு பதிலாக, டாட்டா ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்களை, இந்திய ராணுவம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. அந்த காரில் உள்ள மிரட்டலான வசதிகள் குறித்து, பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

27 ஆண்டுகால ஜிப்ஸிக்கு பிரியாவிடை
உலகின் மிகப்பெரும் பலம் வாய்ந்த ராணுவங்களில், இந்திய ராணுவமும் ஒன்று. பாகிஸ்தான் நாட்டுடன் எப்போதும் சண்டையிட்டு வரும் இந்திய ராணுவத்தின் துணிச்சலான நடவடிக்கைகள், சிலிர்ப்பை ஏற்படுத்தக்கூடியவை. அப்படிப்பட்ட இந்திய ராணுவம், தனது போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு, நீண்ட நெடுங்காலமாக மாருதி சுசூகி ஜிப்ஸியை பயன்படுத்தி வருகிறது.

மிகவும் சவாலான நிலப்பரப்புகளில், பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட, மிகவும் மலிவான விலை கொண்ட வாகனம் என்பதால், மாருதி சுசூகி ஜிப்ஸி மிகவும் புகழ்பெற்றதாக விளங்கியது. கடந்த 1991ம் ஆண்டில் இருந்து மாருதி சுசூகி ஜிப்ஸி கார், இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாருதி சுசூகி ஜிப்ஸி மட்டுமல்லாமல், மகேந்திரா எம்எம் 550 டிஎக்ஸ்பி, ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் உள்ளிட்ட கார்களையும் கூட, இந்திய ராணுவம் இன்னமும் பயன்படுத்தி வருகிறது.

நீண்ட நாட்களாக பயன்படுத்தி வருவதால், மேற்கண்ட கார்களுக்கு ஓய்வு அளிக்க, இந்திய ராணுவம் முடிவு செய்தது. அதற்கு பதிலாக, மிகவும் நவீனமான மற்றும் முரட்டுத்தனமான கார்களை வாங்க முடிவெடுக்கப்பட்டது.

டாட்டாவுடன் ஒப்பந்தம்
இதுகுறித்த தீவிர ஆலோசனையில், இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்முடிவில், இந்திய ராணுவத்திற்கு தேவையான கார்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை, இந்திய நிறுவனமான டாட்டா மோட்டார்ஸ்க்கு வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது.

இதன்பின் 3,192 சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்களை இந்திய ராணுவத்திற்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் தொடர்பான பணிகள் எல்லாம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டன. இதன்பின் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்களை தயாரிக்கும் பணியை, டாட்டா மோட்டார்ஸ் முடுக்கி விட்டது.

வடக்கில் மலை, மேற்கில் பாலைவனம், வட கிழக்கில் அடர்ந்த வனம் என கரடுமுரடான மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் இந்திய ராணுவம் பணியாற்றி வருகிறது. எனவே அதற்கேற்ற வகையில் கார்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு டாட்டா மோட்டார்ஸ்க்கு இருந்து வந்தது.

இதனை உணர்ந்து கொண்டு, களத்தில் இறங்கிய டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்களை பல கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி, இந்திய ராணுவத்திற்கு என பிரத்யேகமான முறையில் தயார் செய்தது. தற்போது இந்த பணிகள் எல்லாம் முடிக்கப்பட்டு விட்டன.

டெலிவரி தொடங்கியது
இதனால் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்களை இந்திய ராணுவத்திற்கு சப்ளை செய்யும் பணியை டாட்டா மோட்டார்ஸ் தொடங்கி விட்டது. இந்திய ராணுவத்திற்கு ஒப்படைப்பதற்காக, டிரக்குகளில் எடுத்து செல்லப்பட்ட சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. அவை வேக வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் அனைத்து கார்களையும் முழுமையாக சப்ளை செய்து முடித்த உடன், ராணுவ பணியாளர்களுக்கு தேவையான பணிகளில், சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி பயன்படுத்தப்படும். போர்க்காலங்களில் ரோந்து பணியிலும் இந்த கார்கள் ஈடுபடுத்தப்படும்.

டாடா சபாரி ஸ்டிரோம் எஸ்வியூ கார்கள், தற்போது வழக்கமான மார்க்கெட்டிலும் கூட விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இந்திய ராணுவத்திற்கு என பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள ''இந்தியன் ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி'' காரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அசத்தலான வசதிகள்
ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்கள் ஆலிவ் பச்சை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வெடி பொருட்கள் மற்றும் தோட்டாக்களின் தாக்குதலில் இருந்து தப்பக்கூடிய வகையிலான கவசங்களையும் இந்த கார்களுக்கு டாட்டா மோட்டார்ஸ் வழங்கவுள்ளது.

ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் காரின் பேனட்டில், ஆண்டனா பொருத்தப்பட்டுள்ளது. இது ராணுவ வீரர்களின் எளிதான தொலைதொடர்பிற்கு உதவி செய்யும். காரின் பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள பின்டில் ஹுக், மற்ற வாகனங்களை கயிறு கட்டி இழுத்து வர (டவ்விங்) உதவும்.

மிக சவாலான நிலப்பரப்புகளில், இரவு நேரங்களில் எளிதாக பயணிப்பதற்கு வசதியாக காரின் முன்பகுதியில், கூடுதல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆலிவ் பச்சை நிறமுடைய இந்த கார்கள், இந்திய ராணுவ படைகளால் மட்டுமே பயன்படுத்தப்படும். ஒரு சிவிலியன் வாகனம் ஆலிவ் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருந்தால், இந்தியாவில் அதனை சட்டப்பூர்வமாக ரிஜிஸ்டர் செய்ய முடியாது. எனவே சிவிலியன் வெர்ஷன் வாகனங்களில் இருந்து இதனை தனித்துவப்படுத்தி காட்ட முடியும். இதன் டயர்கள் கூட ஆலிவ் பச்சை நிறத்தில்தான் பூசப்பட்டுள்ளன.

800 கிலோ பே லோடு கெபாசிட்டி, ஏர் கண்டிஷன் உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்ற விதியை இந்திய ராணுவம் வகுத்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில், சபாரி ஸ்டிரோம் எஸ்யூவி கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில், பவர் ஸ்டியரிங் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் முன்பகுதியில் 2 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவம் முன்பு பயன்படுத்திய ஜிப்ஸி, மகேந்திரா எம்எம் 550 டிஎக்ஸ்பி, ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் உள்ளிட்ட கார்களில் ஏர் பேக் வசதிகள் எல்லாம் கிடையாது.

ஆர்மி வெர்ஷன் சபாரி ஸ்டிரோம் காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 4 வீல் டிரைவ், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளிட்ட வசதிகளுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications