புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகமாகிறது!!
புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் வரும் நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மும்பையில் உள்ள டாடா மோட்டார்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் சென்டருக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்று பார்வையிட்டதுடன், உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார். அப்போது, அடுத்த இரண்டு மாதங்களில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் வரும் நவம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும், ஆந்திராவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலையை டாடா மோட்டார்ஸ் அமைப்பதற்கான சாத்தியமும் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே, மத்திய அரசின் இஇசிஎல் அமைப்பிற்கு டிகோர் எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் சப்ளை செய்து வருகிறது. இந்த நிலையில், தனிநபர் வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டாடா மோட்டார்ஸ் ஆயத்தமாகி வருகிறது.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் 30kW மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார் சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. முழுமையாக பேட்டரியை சார்ஜ் செய்தால் 130 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தை தொடும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த காரில் 72V பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை சாதாரண சார்ஜர்கள் மூலம் 6 மணிநேரம் சார்ஜ் செய்தால் 80 சதவீதம் வரை சார்ஜ் ஏற்ற முடியும். டிகோர் காருக்கு ஃபாஸ்ட் சார்ஜர் கூடுதல் ஆக்சஸெரீயாக விற்பனை செய்யப்படும். இதன்மூலமாக, 1.5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

சாதாரண மாடலில் இருந்து இந்த எலெக்ட்ரிக் டிகோர் காரை வேறுபடுத்தும் விதமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புற க்ரில் அமைப்பில் EV என்ற முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது. பனி விளக்குகள் மற்றும் முக்கிய பகுதிகளில் நீல வண்ண அலங்காரம் செய்து தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த காரில் 15 அங்குல அலாய் வீல்கள், கருப்பு வண்ண கூரை உள்ளிட்டவையும் முக்கிய மாற்றங்களாக இருக்கின்றன. காரில் விசேஷ டீகெல் எனப்படும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு இருப்பது வேறுபடுத்துகின்றன.

வரும் செப்டம்பர் மாதம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் FAME II திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி இருக்கிறார். அதனைத்தொடர்ந்து, இந்த புதிய டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Source:The Hindu


Click it and Unblock the Notifications








