நெடுஞ்சாலைகளில் அவசர உதவிக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்!
நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு உடனடியாக அவசர உதவி கிடைக்கும் நோக்கத்தில், 1033 என்ற புதிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு உடனடியாக அவசர உதவி கிடைக்கும் நோக்கத்தில், 1033 என்ற புதிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் இந்த கட்டணமில்லா தொலைபேசி மூலமாக நெடுஞ்சாலையில் பயணிப்போர் அவசர உதவியை பெற முடியும்.

அவசர உதவிக்காக மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் இருக்கும் குறைகள் குறித்த கருத்துக்களையும் இந்த கட்டணமில்லா தொலைபேசி மூலமாக பதிவு செய்ய முடியும். இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைகளை மேம்படுத்தவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

அவசர உதவி சேவையை வழங்குவதற்காக ஆம்புலன்ஸ் சேவை நிறுவனங்கள், டோ செய்து எடுத்துச் செல்லும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த சேவை ஆங்கிலம் தவிர்த்து பல உள்ளூர் மொழிகளில் வழங்கப்பட உள்ளது.

அழைப்பவர் இடத்தை தெரிந்து கொண்டு அருகிலுள்ள அவசர உதவி மையங்கள் மூலமாக உடனடி உதவி கிடைக்க கட்டணமில்லா தொலைபேசி எண் சேவை மையம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இந்த அவசர உதவி எண் தவிர்த்து, புதிய மொபைல் அப்ளிகேஷனையும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. Sukhad Yatra என்ற பெயரிலான இந்த புதிய மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக சுங்கச் சாவடிகளில் காத்திருப்பு நேரம் மற்றும் கட்டணம் குறித்த விபரங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.

நெடுஞ்சாலைகளில் உள்ள குறைபாடான சாலைகள் மற்றும் குறைகள் குறித்தும் இந்த மொபைல்போன் அப்ளிகேஷன் மூலமாக புகார் பதிவு செய்ய முடியும். ஃபாஸ்ட் டேக் என்ற பணம் செலுத்தும் மின்னணு அட்டையை இந்த மொபைல்போன் செயலி மூலமாக வாங்க முடியும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த புதிய மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கி இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு மிகுந்த உதவிகரமாகவும், நெடுஞ்சாலைகளில் உள்ள குறைகளை போக்கி மேம்படுத்தவும் இந்த மொபைல் அப்ளிகேஷன் உதவும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மாதிரி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை அமைப்பதற்கும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனியார் அமைப்புடன் இணைந்து இந்த மாதிரி ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கான முறையான பயிற்சி மற்றும் சாலை விதிகள் மற்றும் சாலை விழிப்புணர்வு பாடங்களை இந்த பயிற்சி பள்ளிகள் மூலமாக வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சி பள்ளிகளுக்கான நிலம், வகுப்பறை கட்டடங்கள் மற்றும் சிமுலேட்டர் சாதனங்களுடன் பயிற்சி பள்ளிகளை தொடங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளளாம். இந்த பயிற்சி பள்ளிகளுக்கு ரூ.1 கோடி வரை நிதி உதவி வழங்கப்படும். அதற்கு இணையான முதலீட்டை பயிற்சி பள்ளி அமைக்க விருப்பமுடையவர்கள் செய்ய வேண்டி இருக்கும்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடும் தன்னார்வ நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்கு ரூ.5 லட்சம் வரை நிதி அளிக்கப்படும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாலை அவசர உதவிக்காக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 1033 என்ற புதிய தொலைபேசி எண் நிச்சயம் நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு வரப்பிரசாதமாக அமையும். அதேபோன்றே, மொபைல் அப்ளிகேஷனும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








