டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்படுகின்றன... !!
எரிபொருள் குழாய் தவறாக இணைக்கப்பட்டிருக்கும் பிரச்னையால், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 16ந் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களும், கடந்த
எரிபொருள் குழாய் இணைப்பில் பிரச்னை இருப்பதால், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் இந்தியாவில் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

எம்பிவி செக்மென்ட்டில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரும், பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக இருக்கும் இந்த மாடல்களின் முக்கிய உதிரிபாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எரிபொருள் ஹோஸ் பைப் தவறான முறையில் கேனிஸ்ட்டர் டேங்க்குடன் இணைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், கேனிஸ்ட்டர் டேங்க்கில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால், பிரச்னை இருப்பதை பரிசோதித்து சரிசெய்து தருவதற்காக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் கார்களை திரும்ப அழைக்க டொயோட்டா முடிவு செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 16ந் தேதி முதல் கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா கார்களில் இந்த பிரச்னை இருப்பதாக கருதப்படுகிறது. அதேபோன்று, கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் 16 முதல் கடந்த மார்ச் 22ந் தேதி வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஃபார்ச்சூனர் எஸ்யூவிகளில் இதே பிரச்னை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில் உற்பத்தி ெய்யப்பட்ட 2,628 இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் எஸ்யூவிகள் திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன. மேலும், வயரிங் பிரச்னையும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுதவிர, எலக்ட்ரிக்கல் பிரச்னை இருப்பதாகவும் கருதப்படுகிறது. வயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி இணைப்புப் பகுதிகளில் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரச்னையும் பரிசோதிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிரச்னை இருப்பதாக கருதப்படும் கார் உரிமையாளர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்று டொயோட்டா வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. பிரச்னை இருப்பது தெரிய வந்தால், சரிசெய்தவதற்கு ஒரு நாள் கூட ஆகும் வாய்ப்பு இருப்பதால், வாடிக்கையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொண்டு காரை சர்வீஸ் மையத்தில் விடுமாறு டொயோட்டா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய சொகுசு வகை வாகனங்கள் இந்தியர்கள் மத்தியில் அதீத நம்பிக்கையை பெற்றவை. சொகுசு, வசதிகள், நீடித்த உழைப்பு ஆகியவற்றிற்கு பெயர் போன இந்த வாகனங்களில் தற்போது குறைபாடு இருப்பதாக திரும்ப அழைக்கப்பட இருக்கின்றன.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் ரூ.14.33 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலும், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ரூ.26.64 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலும் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








