காஸ்ட்லி கடவுளுக்கு காஸ்ட்லி கார் கொடுத்த சபாஷ் நாயுடு! இந்த கார் உள்ள உலகின் முதல் கோயில் திருப்பதி
திருப்பதி கோயிலுக்கு ஆந்திர பிரதேச அரசு 50 எலக்ட்ரிக் கார்களை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் உலகின் முதல் கோயில் என்ற பெருமையை திருப்பதி பெறுகிறது.
திருப்பதி கோயிலுக்கு ஆந்திர பிரதேச அரசு 50 எலக்ட்ரிக் கார்களை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் உலகின் முதல் கோயில் என்ற பெருமையை திருப்பதி பெறுகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அவை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்தியாவின் இதர மாநில அரசுகளும், எலக்ட்ரிக் வாகன கொள்கைகளை வகுத்து வருகின்றன.

இதன்படி ஆந்திர பிரதேச மாநில அரசு, தனது எலக்ட்ரிக் வாகன கொள்கையின் ஒரு பகுதியாக, 350 எலக்ட்ரிக் கார்களை வாங்கி, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இதில், 50 கார்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) வழங்கப்படுகிறது.

ஆந்திர பிரதேச மாநில அரசு வழங்கும் எலக்ட்ரிக் கார்களை, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் பயன்படுத்த உள்ளனர். இதன்மூலம் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் உலகின் முதல் கோயில் நிர்வாகம் என்ற பெருமையை திருப்பதி பெறுகிறது.

எனர்ஜி எபீஷியன்ஸி சர்வீஸஸ் (EESL) என்ற நிறுவனத்திடம் இருந்து மாத வாடகை அடிப்படையில்தான், எலக்ட்ரிக் கார்கள் வாங்கப்படுகின்றன. இதற்காக EESL நிறுவனத்துடன், ஆந்திர பிரதேச அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு கழகம் (NREDCAP) ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

NREDCAP கழகமானது, ஒரு காருக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாயை, EESL நிறுவனத்திற்கு, வாடகையாக வழங்கும். இதுதவிர டிரைவருக்கான ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவு என தனியாக மாதந்தோறும் ஒரு காருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

6 ஆண்டுகளுக்கு பிறகு, கார்களின் ஓனர்ஷிப், ஆந்திர பிரதேச மாநில அரசின் பெயருக்கு மாற்றப்படும். இந்த வகையில் பார்த்தால், ஒரு எலக்ட்ரிக் காரின் விலை ரூ.11 லட்ச ரூபாய் அளவுக்கு வருகிறது.

ஆந்திர பிரதேச அரசின் நடவடிக்கை பாராட்டுக்கு உரியதாக இருந்தாலும், விலை சற்று அதிகம் என கருதப்படுகிறது. முன்னதாக இந்த கார்களை எப்படி இயக்குவது? எப்படி பராமரிப்பது? என்பது குறித்து டிரைவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இந்த கார்களில் ஒரு முறை சார்ஜ் செய்தால், 120 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கலாம். ஒரு கிலோ மீட்டர் பயணிக்க 1.5 முதல் 2 ரூபாய் வரை மட்டுமே செலவாகும் என்பது இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

புதிய எலக்ட்ரிக் கார்களுக்கு ஏசி சார்ஜர் வழியாக சார்ஜ் செய்ய 6 மணி நேரமும், டிசி சார்ஜ் மூலமாக சார்ஜ் செய்ய ஒன்றரை மணி நேரமும் பிடிக்கும். மாநில அரசு வகுத்துள்ள விதிகளின் படி சார்ஜிங் உபகரணங்களை விற்பனை செய்வதற்கான விற்பனையாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு என ஒதுக்கப்பட்ட 50 கார்களும், இந்த மாத இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும். ஆந்திர பிரதேச மாநிலம் முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள அமைப்புகள் அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கு தலா 50 கார்கள் வீதம் ஒதுக்கப்படுகின்றன.

இதன்படி திருமலா திருப்பதி தேவஸ்தானத்துடன் சேர்த்து, விஜயவாடா மற்றும் திருப்பதி மாநகராட்சிகள், கிரேட்டர் விசாகப்பட்டிணம் மாநகராட்சி உள்பட மொத்தம் 7 அமைப்புகள் மற்றும் பகுதிகளுக்கு தலா 50 எலக்ட்ரிக் கார்கள் வீதம் வழங்கப்படுகின்றன.

இணை இயக்குனர்கள் மற்றும் இணை கமிஷனர்கள் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த கார்கள் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, ஆந்திரா மக்கள் சபாஷ் போட்டுள்ளனர்!
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








