களத்தில் இறங்கிய புதிய தலைவர்... கடும் போட்டியால் ஓலா-உபேர் இணைப்பு?
இந்தியாவில் உபேர் மற்றும் ஓலா கேப் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், இரு நிறுவனங்களும் இணைக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தியாவில் உபேர் மற்றும் ஓலா கேப் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள சூழலில், இரு நிறுவனங்களும் இணைக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமை இடமாக கொண்டு உபேர் கேப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 630க்கும் மேற்பட்ட நகரங்களில், டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா, படகு சேவைகளை உபேர் நிறுவனம் வழங்கி வருகிறது.

அமெரிக்காவின் ஒரு சில இடங்களில் தானியங்கி கார்களையும் உபேர் நிறுவனம் இயக்கி வருகிறது. இதுதவிர அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா உடன் இணைந்து பறக்கும் கார்களை நடைமுறைக்கு கொண்டு வரும் முயற்சியிலும் உபேர் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

பறக்கும் டாக்ஸிகள் சாத்தியமானால், நகரங்களில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே உபேர் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவராக இந்தியரான அமித் ஜெயின் பணியாற்றி வந்தார்.

கடந்த ஓரிரு தினங்களுக்கு முன், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பொது மேலாளராக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் உபேர் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் புதிய தலைவராக பிரதீப் பரமேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை, உபேர் நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பொது மேலாளரான அமித் ஜெயின் இன்று வெளியிட்டார். ''எனக்கு பின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தின் தலைவராக பிரதீப் பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி'' என அமித் ஜெயின் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் பிரதீப் பரமேஸ்வரன், உபேர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளில், உபேர் நிறுவனத்தின் முக்கியமான மார்க்கெட்டாக கருதப்படும் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவராக அவர் உயர்ந்துள்ளார்.

இந்தியாவில் உபேர் நிறுவனத்திற்கு, ஓலா கேப் நிறுவனம் கடுமையான சவால் அளித்து வருகிறது. ஓலா கேப், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓர் இந்திய நிறுவனம் ஆகும்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக உபேர் நிறுவனத்தின் மிகப்பெரிய மார்க்கெட் இந்தியாதான். ஆனால் இங்கு ஓலா நிறுவனம் கடுமையான சவால் அளித்து வருவதால், இன்னும் அதிகமான தொகையை முதலீடு செய்து, போட்டியை சமாளிக்க உபேர் நிறுவனம் விரும்புகிறது.

ஓலா நிறுவனத்தின் போட்டியை சமாளிக்க கூடிய தகுதி வாய்ந்த நபராக கருதப்படுவதால், உபேர் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்திய தலைவராக பிரதீப் பரமேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா தவிர ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் மிகவும் வெற்றிகரமாக செயல்பட உபேர் நிறுவனம் விரும்புகிறது. ஆனால் ஓலா நிறுவனம் சமீபத்தில் தனது சேவையை ஆஸ்திரேலிய நகரங்களுக்கும் விரிவாக்கி, உபேர் நிறுவனத்திற்கு அதிர்ச்சியளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், கடந்த பிப்ரவரி மாதம், ஓலா நிறுவனம் தனது சேவையை லான்ச் செய்தது. அதன்பின் மார்ச் மாதம் சிட்னி நகரிலும், ஏப்ரல் மாதம் மெல்போர்ன் நகரிலும் அதன் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

இதனால்தான் இந்தியா மற்றும் தெற்காசிய பிரிவு தலைவராக இருந்த அமித் ஜெயினை, ஆசிய-பசிபிக் பிராந்திய பொது மேலாளராக உபேர் நிறுவனம் நியமித்தது. ஆசிய-பசிபிக் பிராந்தியம் என்பது ஓலா வேகமாக வளர்ந்து வரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கியது.

இதனிடையே போட்டி கடுமையாக உள்ளதால் இந்தியாவில், உபேர் மற்றும் ஓலா ஆகிய 2 நிறுவனங்களும் இணைக்கப்பட உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இணைப்பு தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், இது வெறும் வதந்திதான் என்றும் இரு நிறுவனங்களும் கூறியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








