இந்தியா முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு புதிய லைசென்ஸ்… போலிகளை ஓழிக்க மோடியின் அதிரடி மூவ்...!
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக வழங்கும் லைசென்ஸ் மற்றும் வாகனங்களுக்கான ஆர்சிகளை மாற்றி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான லைசென்ஸ் மற்றும் ஆர்சிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் மத
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக வழங்கும் லைசென்ஸ் மற்றும் வாகனங்களுக்கான ஆர்சிகளை மாற்றி இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான லைசென்ஸ் மற்றும் ஆர்சிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் போலிகளை ஓழிப்பதுடன் பல்வேறு வசதிகளையும் பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வரும் வேகத்தை விட அதிகமான வேகத்தில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட உலகிலேயே இந்தியாவில்தான் அதிக வாகனங்கள் பயன்படுத்தும் நிலைமை உள்ளது.

இந்தியாவில் தினமும் 32 ஆயிரம் புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ்கள் வழங்கப்படுகின்றன. மேலும் 43 ஆயிரம் வாகனங்களுக்கு பதிவோ அல்லது மறு பதிவோ நடக்கிறது.

இவ்வளவு வேகத்தில் இந்தியாவில் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. இவ்வளவு அதிக பயன்பாடு இருப்பதால்தான் போக்குவரத்து துறை பல்வேறு சிக்கல்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறது.

ஆனால் டிஜிட்டல் காலத்தில் இது ஒரு பொருட்டே அல்ல. எல்லா விதமான பிரச்னைகளையும் எளிதாக சமாளிக்கவும் பல்வேறு தொழிற்நுட்பங்கள் வந்துவிட்டன. இது விரைவில் போக்குவரத்து துறையையும் ஆட்கொள்ளவிருக்கிறது.

இன்று போக்குவரத்து துறை சந்திக்கும் பெரும் சவால் என்பது போலி ஆவணங்கள்தான். இன்றைய தொழிற்நுட்பத்தில் அரசின் ஆவணம் போலவே சுலபமாக பல போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுகிறது. பலர் தங்கள் வாகனங்களுக்கு போலி ஆர்சி புக், தங்களுக்கு போலியான லைசன்ஸ்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வாகன சோதனையில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது.

மேலும் தற்போது போக்குவரத்துறை வழங்கும் ஆர்சி புக்குகள், லைசென்ஸ்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு முறை கடைபிடிக்கப்படுகிறது. அதனால் வேறு மாநிலத்தில் உள்ள வாகனத்தை சோதனை செய்யும் அதிகாரிகளுக்கு அது அசலா, போலியா? என்ற சந்தேகம் எழுகிறது.

இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்தியா முழவதும் ஒரே மாதிரியான லைசென்ஸ்கள் மற்றும் ஆர்.சி புக் ஆவணங்களை வழங்க தற்போது முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஆவணங்களில் பல்வேறு வகையிலான தொழிற்நுட்ப வசதிகளும் புதிய தகவல்களும் சேர்க்கப்படவுள்ளன.

தற்போது இந்தியா முழுவதும் உள்ள போக்குவரத்து துறை ஒரே டேட்டா பேஸ் என்று அழைக்கப்படக்கூடிய தகவல் தளத்தில் இணைக்கப்பட்டு விட்டது. எங்கிருந்து வேண்டுமானாலும் யாருடைய தகவலையும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் பெற முடியும் என்ற நிலை வந்து விட்டது.

மேலும் எம் பரிவாகன் என்ற மொபைல் போன் செயலி மூலம் தங்களுக்கான தகவல்களையும் பயனர்களே சேமித்துக்கொள்ள முடியும் என்ற நிலையும் தற்போது வந்துவிட்டது. இதை தற்போது மேம்படுத்தும் விதமாக வாகன சோதனையின் போது அதிகாரிகள் சோதனை செய்யும் ஆவணத்தை கொண்டே இது போலியா அசலா? என்பதை அரசின் தகவல் தள தகவல் உடன் எளிமையாக ஒப்பிடும் வகையில் தொழிற்நுட்ப வசதிகள் கொண்டு வரப்படவுள்ளது.

அதன் படி இந்தியாவில் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படவுள்ள டிரைவிங் லைசென்ஸ் மற்றும் ஆர்சி புக் ஒரே மாதிரியாக இருக்கும். மேலும் அன்று முதல் புதுப்பிக்கப்படும் லைசென்ஸ்களும் இந்த வடிவமைப்பையே கொண்டிருக்கும்.
உங்கள் மொபைலில் உடனுக்குடன் ஆட்டோமொபைல் செய்திகளை பெற இங்கே கிளிக் செய்யுங்கள்..

இந்த புதிய ஸ்மார்ட் லைசென்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஆர்சியில் சிறிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் லைசென்ஸில் க்யூஆர் கோடு எனப்படும் ரகசிய தகவல் குறியீடும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

இந்த ஸ்மார்ட் லைசென்ஸ் மற்றும் ஸ்மார்ட் ஆர்சியில் உள்ள மைக்ரோ சிப் கார்டு இந்த கார்டின் என்எஃப்சி (Near Field Communication) ஆக செயல்படும். இதை வாகன சோதனை செய்யும் அதிகாரிகள் தங்களிடம் உள்ள கருவியில் செலுத்தினால் அதன் மூலம் அந்த கார்டிற்கு அரசின் தகவல் தளத்தில் என்ன தகவல் உள்ளது என்பதை அவர்களால் பார்க்க முடியும்.

மேலும் புதிய டிரைவிங் லைசென்ஸில், லைசென்ஸ் வைத்திருப்பவர் உறுப்பு தானம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளாரா இல்லையா, லைசென்ஸ் வைத்திருப்பவர் ஊனமுற்றவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களை ஓட்ட அனுமதி பெற்றவரா என்ற விபரங்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

மேலும் 2019ம் ஆண்டு ஜூலை முதல் வரப்போகும் புதிய லைசென்ஸில், லைசென்ஸ்களை வழங்கும் மாநில அரசின் முத்திரை மற்றும் அந்த லைசென்ஸ் செல்லுபடியாகும் காலம், லைசென்ஸ் வைத்திருப்பவரின் பெயர், ரத்த வகை, உடல் உறுப்பு தானம் குறித்த விருப்பம், அவசர தொடர்பு எண், எந்த வகை வாகனம் ஓட்ட அனுமதி, லைசென்ஸின் தகவல் தளத்தை தொடர்பு கொள்ளக்கூடிய க்யூ ஆர் கோடு ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

புதிய ஆர்சியில் அதே போல மத்திய, மாநில அரசின் முத்திரைகள், செல்லுபடியாகும் காலம், வாகனத்தின் வகை, சேஸிஸ் மற்ம் இன்ஜின் நம்பர், எரிபொருள் மற்றும் புகை உமிழ்வு தரம் (பிஎஸ்4/பிஎஸ்6) போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

மேலும் இந்த புதிய லைசென்ஸ் மற்றும் ஆர்சிகள், கில்லோச்சே வகை பிரிண்டிங்கில் வரும். மேலும் அதில் சிறிய அளவிலான எழுத்துக்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். மேலும் சிறிய அளவிலான கோடிகள் கொண்டு டிசைன் செய்யப்பட்டிருக்கும். இவை எல்லாம் அல்ட்ரா வைலட் ஃப்ளுரெசென்ட் கலரில் இருக்கும். இதில் ஹாலோகிராம் புரோஜெக்டர்கள் பொருத்தப்பட்டிருக்கும் அதில் வாட்டர் மார்க்கும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

புதிய ஆர்சியில் வாகனத்தின் எரிபொருள் மற்றும் புகை உமிழ்வு தரம் பதிவு செய்ப்படுகிறது. அதன் மூலம் எதிர்காலத்தில் மாசு கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிக்க முடியும். அதை கருத்தில் கொண்டே அவை புதிய ஆர்சியில் இடம் பெறுகின்றன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான பணியை தற்போதே மத்திய அரசு துவங்கிவிட்டது. வாகன பரிசோதனையின் போது அது அசலா போலியா என்பதை கண்டுபிடிக்க அந்த லைசென்ஸில் உள்ள மைக்ரோ சிப்களை பயன்படுத்தி அதிகாரிகள் தங்கள் கையில் உள்ள கருவி மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது அவர்களது செல்போனில் உள்ள அரசின் ஆஃப் மூலம் இந்த ஆவணங்களில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து தகவல்களை அவர்கள் பெறலாம்.

இந்த புதிய லைசென்ஸ் மற்றும் ஆர்சியை பிரிண்ட் செய்ய ஒரு லைசென்ஸ் அல்லது ஆர்சிக்கு ரூ.15-20 தான் செலவாகும். அதனால் மாநில அரசுகள் இதை கொடுக்கப்பட்ட காலத்திற்குள் நடைமுறைக்கு கொண்டு வந்துவிடலாம் என்று மத்தியரசு கூறியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தின் டெலிகிராம் செயலி சேனலில் இப்பொழுதே இங்கே கிளிக் செய்து இணையுங்கள்..!

பாலாவின் பார்வையில்:
மத்திய அரசின் இந்த முயற்சி நிச்சயம் வரவேற்க்கப்பட வேண்டியதே. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள டிஜிட்டல் லைசென்ஸ் மற்றும் ஆர்சி குறித்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அதே நேரத்தில் தகவல்கள் எல்லாம் ஒரே வகையில் சேமிக்கப்படுவதால் அதை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் தவிர மற்றவர்களும் பார்க்கும் வாய்ப்புகள் எளிதாக இல்லாமலும் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லா தகவல்களையும் எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி வைத்தால் ஆவணங்களின் பாதுகாப்பு தன்மை குறைந்து விடும் என்பதை அரசு மனதில் வைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications