புதிய மாருதி ஈக்கோ மற்றும் ஓம்னி மாடல்கள் பற்றிய விபரஙகள்!
சிறப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஓம்னி மற்றும் ஈக்கோ கார்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி ஈக்கோ மற்றும் ஓம்னி கார்கள் சத்தமில்லாமல் விற்பனையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை மாதாமாதம் பெற்று வருகின்றன. மிக நீண்ட காலமாக இந்த இரு மாடல்களிலுமே எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இருப்பினும், விற்பனை சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.

இந்தநிலையில், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் கார்களுக்கான புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த இரு மாடல்களையும் மேம்படுத்த முதலீடு அதிகம் தேவைப்படுவதால், மாருதி நிறுவனம் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், விற்பனை எண்ணிக்கை நல்ல நிலையில் இருப்பதால், இரு மாடல்களையும் விலக்குவது புத்திசாலித்தனமாக இருக்காது என்று கருதி மாருதி நிறுவனம் ஈக்கோ மற்றும் ஓம்னி கார்களை மேம்படுத்தி வருவதாக மணிகன்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

தற்போது மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் 15 கார் மாடல்களில் 9 கார் மாடல்கள் புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்றதாக மேம்படுத்தப்பட்டுவிட்டது. இந்த சூழலில் இதர மாடல்களையும் மேமம்படுத்தி வருகிறது.

ஈக்கோ மற்றும் ஓம்னி ஆகிய இரு மாடல்களும் பழைய கட்டமைப்பு தாத்பரியங்களில் வடிவமைக்கப்பட்டவை. 2016ம் ஆண்டு குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட் விதிமுறையில் ஈக்கோ கார் புள்ளிகள் எதுவும் பெறாமல் மதிப்பீட்டில் பூஜ்ய மதிப்பீட்டை பெற்றது.

அடுத்த ஆண்டு அக்டோபர் 1 முதல் வர இருக்கும் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளின்படி, முன்புற கட்டமைப்பு உள்பட காரின் கட்டமைப்பு சிறப்பானதாக மேம்படுத்த வேண்டும். இதற்கான பணிகளில் அனைத்து நிறுவனங்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளின்படி கார்கள் வடிவமைக்கப்படுவதால், விபத்துக்களின்போது பயணிகளுக்கான பாதுகாப்பு மேம்படும். உயிரிழப்புகள் தவிர்ப்பதற்கான வாய்ப்பையும் உருவாக்கும். இதுதவிர, ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களும் பல மாடல்களில் கொடுக்கப்பட்டு வருகிறது.

வரும் காலங்களில் மேலை நாடுகளை போன்று இந்தியாவிலும் கார்களின் பாதுகாப்பு வெகுவாக மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கார்கள் மேம்படுத்தப்படுவதால், அடுத்த ஆண்டு அக்டோபர் முதல் கார்களின் விலையும் குறிப்பிடத்தக்க அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








