இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!!
ஜாகுவார் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனங்களின் கார்களின் டிசைன் பிரிவில் பணிபுரிந்த சங்கி வஸிராணி என்ற இந்தியர்தான் இந்த புதிய ஹைப்பர் காரை வடிவமைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை மும்பையை சேர்ந்த டிசி டிசைன் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது அடுத்ததாக வஸிராணி ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனம் புதிய ஹைப்பர் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் குறித்த முழுமையானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜாகுவார் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனங்களின் கார்களின் டிசைன் பிரிவில் பணிபுரிந்த சங்கி வஸிராணி என்ற இந்தியர்தான் இந்த புதிய ஹைப்பர் காரை வடிவமைத்துள்ளார். அதேநேரத்தில், இந்தியாவில் ஹைப்பர் கார்களை உருவாக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அமெரிக்காவில் வைத்து உருவாக்கி இருக்கிறார்.

ஐரோப்பாவில் நடந்து வரும் குட்வுட் ஸ்பீடு ஃபெஸ்டிவல் ஆட்டோமொபைல் திருவிழாவில் இந்த கார் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. வஸிராணி ஷூல் என்று பெயரிடப்பட்டு இருக்கும் இந்த ஹைப்பர் கார் ஒரு ஹைப்ரிட் ரக மாடல். டர்பைன் மற்றும் மின் மோட்டார்கள் துணையுடன் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் உருவாக்கத்திற்கு ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா அணி பெரும் ஒத்துழைப்பை நல்கி இருக்கிறது. அதுபோன்று, இந்த காரின் டர்பைன் மற்றும் கியர்பாக்ஸ்களை உருவாக்குவதற்கு இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் தொழில்நுட்ப உதவியை வழங்கி இருக்கிறது. மிச்செலின் மற்றும் பிரெம்போ ஆகிய நிறுவனங்களும் இந்த ஹைப்பர் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கி இருக்கின்றன.

இந்த காரின் நான்கு சக்கரங்களிலும் தலா ஒரு மின் மோட்டார் வீதம் 4 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. டார்க் வெக்டரிங் தொழில்நுட்பத்தில் இயங்குவதால், ஒவ்வொரு மின்மோட்டாரும் சக்கரத்திற்கு தேவைப்படும் சக்தியை மிக துல்லியமாக வழங்கும்.

இந்த காரின் பேட்டரி வெறும் 300 கிலோ மட்டுமே எடை கொண்டது. மைக்ரோ டர்பைன் மூலமாக பேட்டரியை சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, ஒரே பேட்டரியில் இந்த காரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த காரின் டர்பனைக்கு விசேஷ விமான எரிபொருள் தேவை இல்லை. சாதாரண பெட்ரோலில் இயங்கும் என்பது மிக முக்கிய சிறப்பு.

கூடுதல் பேட்டரிகள் தவிர்க்கப்பட்டு இருப்பதால், காரின் எடையும் வெகுவாக குறைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரேக் பிடிக்கும்போதும் பேட்டரி சார்ஜ் ஆகும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் நுட்பமும் இந்த காரில் உள்ளது. இதனால், இந்த ஹைப்பர் கார் ரேஞ்ச் குறித்து அதிக கவலை கொள்ள தேவை இருக்காது என்று வஸிராணி ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கார் முழுக்க முழுக்க சிறந்த கையாளுமை கொண்ட ஹைப்பர் காராக வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சங்கி வஸிராணி தெரிவித்துள்ளார். 0 - 100 கிமீ வேகத்தை எட்டும் திறனை நோக்கமாக கொண்டு இது வடிவமைக்கப்படவில்லை. அதேநேரத்தில், செயல்திறனிலும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். முழுமையான தொழில்நுட்ப விபரங்களும் இப்போது வெளியிடப்படவில்லை.

கார்பன் ஃபைபர் உதிரிபாகங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன், மிகச் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தத்துவப்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவிலையே இந்த காரை உற்பத்தி செய்தற்கு வஸிராணி திட்டமிட்டுள்ளார். இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல் இல்லை.
Source: AutocarUK


Click it and Unblock the Notifications








