அடுத்த ஆண்டு முதல் "ஹை- செக்யூரிட்டி நம்பர் பிளேட்" கட்டாயமாகிறது!!
வரும் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.
வரும் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும், உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட உள்ளது.

திருட்டு மற்றும் முறைகேடுகளை தடுக்கும் விதத்தில், கார் உள்ளிட்ட வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவு எண் பலகை பொருத்தப்பட வேண்டும் என்று 2005ம் ஆண்டு உச்ச நீன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சில மாநிலங்கள் மட்டுமே அமல்படுத்தின. தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை.

அரசாங்கத்திடமிருந்து அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இந்த நம்பர் பிளேட்டை தயாரித்து கொடுக்க முடியும் என்ற முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததுடன், தடையும் பெறப்பட்டது. ஆனால், இந்த தடையையும் நீதிமன்றம் விலக்கி விட்டது. இந்த சூழலில், உயர் பாதுகாப்பு பலகை பதிவு எண் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

அண்மையில் இதற்கான வரைவு சட்டமும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி, வரும் 2019 ஜனவரி முதல் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் உயர் பாதுகாப்பு பலகை எண் பொருத்தப்பட இருக்கிறது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கார் பதிவு செய்தவுடன், அதற்கான உயர்பாதுகாப்பு பலகை எண் டீலரியே பொருத்தி கார் டெலிவிரி கொடுக்கப்படும்.

காரிலிருந்து நம்பர் பிளேட்டை கழற்ற முடியாது. வேறு நம்பர் பிளேட்டை பொருத்த வேண்டுமெனில், இனி டீலரில்தான் மாற்ற முடியும். மீறி நம்பர் பிளேட்டை கழற்றி மாற்ற முயற்சித்தால், ஸ்நாப் லாக் என்ற நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக பதிவு எண் மற்றும் தகவல்கள் அழிந்து போய்விடும்.

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்:
சரி, ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் அப்படீன்னா என்ன? அதை பொருத்த வேண்டிய அவசியம் என்ன? உள்ளிட்ட விபரங்களை சற்று விரிவாகவே பார்க்கலாம். வாகனங்களை போலி நம்பர் பிளேட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதுதான் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்.

தவிர, வாகனம் திருடு போகும்போதும், விபத்து ஏற்படும் நேரங்களிலும் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளில் இருக்கும் விபரங்களை வைத்து உடனடியாக உரிமையாளர் பெயர் மற்றும் விபரங்களை கண்டு பிடிக்க முடியும்.

ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்டுகளை அரசாங்கம் நியமிக்கும் குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே வாகனங்களில் பொருத்தும். வாகனத்தில் ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் பொருத்தியவுடன் அந்த நம்பர் பிளேட்டை கழற்றவோ அல்லது பிற வாகனங்களில் பொருத்தவும் முடியாது. அப்படியொரு பக்காவான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகிறது.

சமூக விரோதிகள் இதுபோன்று மாற்ற நினைத்து அகற்றினால், அந்த நம்பர் பிளேட் உடனடியாக அழிந்து விடும் வகையில், ஸ்நாப் லாக் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. எனவேதான் இதற்கு ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம்.

இதைவிட இந்த நம்பர் பிளேட்டுகளில் ஓர் முக்கிய விஷயம், இதில் பதிக்கப்பட்டிருக்கும் குரோம் பூச்சுடன் கூடிய ஹாலோகிராம் ஸ்டிக்கர் மூலம், சம்பந்தப்பட்ட வாகனம் குறித்த விபரங்களை 200 மீட்டர் தொலைவிலிருந்தே தெரிந்து கொள்ள முடியும்.

வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் தவிர, மூன்றாவதாக வாகனத்தில் முன்புற கண்ணாடியில் சிறிய பதிவு எண் மற்றும் தகவல்கள் கொண்ட சிறிய மின்னணு அட்டையும் பொருத்தப்படும். இதில், வாகன எஞ்சின் நம்பர், சேஸிஸ் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி, ஆர்டிஓ விபரங்களுடன் உரிமையாளர் பற்றிய ஏ டூ இசட் விபரங்கள் அடங்கிய சிப் ஒன்றும் அந்த நம்பர் பிளேட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.

வாகனங்கள் திருடு போனாலோ அல்லது சமூக விரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டாலோ வாகனத்தை பற்றிய விபரங்களை இந்த சிறிய ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட் மூலம் குறுகிய நேரத்தில் எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

ஒரு நம்பர் பிளேட் பொருத்துவதற்கு ரூ.1000 முதல் ரூ.1,500 வரை செலவாகும் என்று போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரே நாடு, ஒரே வரி திட்டத்தை தொடர்ந்து, அடுத்து ஒரு முக்கிய சீர்திருத்த நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








