இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிடி கார் சோதனை- ஸ்பை படங்கள்!
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிடி கார் பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிடி கார் பெங்களூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மிக அதிகம் விற்பனையாகும் கார் மாடல் கோல்ஃப். உலக அளவிலும் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாடலாகவும் விளங்குகிறது. இந்த நிலையில், நீண்ட காலமாக இந்த கார் இந்தியாவில் கொண்டு வரப்படுமா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. எனினும், போலோதான் சரியான சாய்ஸ் என்ற அடிப்படையில் கோல்ஃப் பற்றி ஃபோக்ஸ்வேகன் பரிசீலிக்கவில்லை.

இந்த நிலையில், பெங்களூர் நகரில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரின் ஜிடிடி மாடல் சாலை சோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. கர்நாடக மாநில தற்காலிக பதிவெண் கொண்டதாக இந்த கார் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த காரை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நேரடியாக இறக்குமதி செய்து சோதனை செய்வதில் சந்தேகம் நிலவுகிறது. இதற்கு காரணம், இந்த காரின் பின்புறத்தில் பாஷ் நிறுவனத்தின் மாசு உமிழ்வை அளவிடும் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இந்த காரை பாஷ் நிறுவனம் இறக்குமதி செய்து சோதனை ஓட்டம் செய்திருக்கலாம் என்று முதற்கட்டத் தகவல்கள் மூலமாக தெரிய வருகிறது. டீசல் எஞ்சின்களில் நச்சுத் தன்மை வாய்ந்த வாயுக்களின் வெளியீட்டை குறைக்கும் ஆராய்ச்சிகளில் பாஷ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்த கார் சோதனை செய்யப்படுவதாக கருதப்படுகிறது.

இந்த கார் சோதனை ஓட்டம் நடப்பது குறித்தும், எதிர்காலத்தில் கோல்ஃப் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்தும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை. எனினும், பெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு மவுசு கூடி வருவதால், இந்த கார் சோதனை ஓட்டத்தை ஒதுக்கித் தள்ளவும் முடியாது.

ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிடி கார் 3 டோர் மற்றும் 5 டோர் மாடல்களில் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.

இது பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த மாடல். இதில், 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் கோல்ஃப் ஜிடிடி மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 181 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி முன்சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், ரூ.27 லட்சம் முதல் ரூ.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரும். தற்போது போலோ ஜிடிஐ ஃபெர்ஃபார்மென்ஸ் ஹேட்ச்பேக் காரை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Picture Courtesy: ETuners Motorsport India


Click it and Unblock the Notifications








