பார்த்தீங்களா... டீன் ஏஜ் பிள்ளைகள்கிட்ட கார் கொடுக்கும்போது ஒண்ணுக்கு ரெண்டு தடவை யோசிங்க!
மும்பை- புனே எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
Recommended Video

மும்பை அருகே எக்ஸ்பிரஸ் சாலையில் நடந்த மிக கோரமான கார் விபத்தில் மூன்று கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

மும்பையை சேர்ந்த ஃபைஜன் ஷேக்[18] என்பவர் தானேயை சேர்ந்ததனது நண்பர் நிலேஷ் தாகூர் மற்றும் தோழிகள் ரிஸ்வானா சவுத்ரி, ஷாரதா மவுரியா மற்றும் ஸ்வேதா துபே ஆகிய 5 பேருடன் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட லோனவாலாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

மேலும், முன்னால் சென்று கொண்டிருந்த டெம்போவை முந்த ஃபைஜன் ஷேக் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது பயங்கரமாக மோதியது.

மேலும், முன்னால் சென்று கொண்டிருந்த டெம்போவை முந்த ஃபைஜன் ஷேக் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது பயங்கரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காருக்குள் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில், ஃபைஜன் ஷேக் மற்றும் ஸ்வேதா துபே ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற மூவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். படுகாயமடைந்த ஷாரதா மவுரியா, நிலேஷ் தாகூர் மற்றும் ரிஸ்வான சவுத்ரியை மீட்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஷாரதா மவுரியாவும் உயிரிழந்தார்.

இந்த விபத்திற்கு அதிவேகமே காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து நிலேஷ் குமாரின் இளைய சகோதரர் நிஷாந்த் தாகூர் கூறுகையில்," எனது சகோதரர் நண்பரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதாக கூறிவிட்டு காலையில் புறப்பட்டு சென்றார்.

ஆனால், யாருடைய பர்த்டே பார்ட்டிக்கு செல்கிறார் என்று எங்களுக்கு தெரியாது. சில மணிநேரத்தில் எங்களுக்கு போலீசாரிடம் இருந்து விபத்து குறித்த தகவல் வந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தது கேட்டு, விரைந்து சென்றோம் என்று கூறி இருக்கிறார்.

பிறந்தநாள் பரிசு கொடுக்க சென்ற நண்பர்களுக்கு மரணமே பரிசாக கிடைத்திருக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இதுபோன்று அதிவேகத்தில் காரை ஓட்டிச் செல்வது குறித்தும், விபத்தில் சிக்கி உயிரிழப்பது குறித்த சம்பவங்கள் குறித்த பலமுறை நாம் எழுதிவிட்டோம்.

டீன் ஏஜ் பிள்ளைகளிடம் அவர்களது மனம் கோணக் கூடாது என்ற நோக்கில் பெற்றோர் கார் மற்றும் பைக்குகளை கொடுத்து ஓட்டச் சொல்கின்றனர். ஆனால், அது சமயத்தில் விபரீதத்தில் முடியும் ஆபத்து இருக்கிறது.

பிள்ளைகளிடம் கார் கொடுக்கும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுப்பது அவசியம். குறிப்பாக, இரவில் நண்பர்களுடன் செல்லும் பிள்ளைகளிடம் கார், பைக்கை கொடுப்பதை தவிர்க்கலாம்.

கார்களில் இப்போது வேகத்தை குறிப்பிட்ட வரம்பில் கட்டுப்படுத்தி வைப்பதற்கான வசதியுடன் வருகின்றன. ஃபோர்டு ஆஸ்பயர் உள்ளிட்ட பட்ஜெட் கார்களிலேயே இந்த வசதி கிடைக்கிறது.

ஜிபிஎஸ் டிராக்கர் கருவியை பொருத்தி வைப்பதும், உங்களது பிள்ளைகள் எங்கு செல்கின்றனர், கண்காணிக்கும் வாய்ப்பும் இப்போது இருக்கிறது. இந்த கருவிகள் இப்போது சில ஆயிரங்களில் கிடைக்கிறது.

கார் குறிப்பிட்ட வேகத்தை தாண்டும்போது எச்சரிக்கும் வசதி கொண்ட கார்களை வாங்கலாம். இதுகுறித்து உங்களது பிள்ளைகளிடம் அறிவுறுத்தி கார் சாவியை கொடுக்கலாம். நிச்சயம் அந்த அலாரம் மூலமாக அவர்களுக்கு உங்கள் வார்த்தைகள் நினைவூட்டப்படும்.

டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் துறுதுறுப்பில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் அவர்கள் வாகனங்களை ஓட்டுவதும், அவர்கள் செய்யும் சிறு பிள்ளைத்தனமான விஷயங்கள் உயிருக்கே உலை வைத்து விடுகின்றன. அந்த சாலையில் வரும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுகிறது.

மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும், கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் தாறுமாறாக ஓட்டுவதுமே விபத்துக்களுக்கு வழிகோலுகின்றன.

நம் நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான விபத்துக்களுக்கு காரணத்தை ஆராய்ந்து பார்க்கும்போது அதில் இளைஞர்கள் முக்கிய காரணமாக இருப்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் நான்கு நிமிடங்களுக்கு ஒரு உயிரிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதில், இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது பெற்றோருக்கான பதிவு மட்டுமல்ல, டீன் ஏஜ் நண்பர்கள், உறவினர் வீட்டு பிள்ளைகளிடம் காரை கொடுக்கும்போதும் உஷாராக இருக்கவே இப்பதிவு.
3 பேரின் உயிரை பலிவாங்கிய இந்த இந்த பயங்கர விபத்தில் கார் நசுங்கி கிடக்கும் கோர காட்சி குறித்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.
Source: Rushlane


Click it and Unblock the Notifications








